பொட்டு சுரேஷ் கொலை, ராமஜெயம் கொலை... எங்கே குற்றவாளிகள்?: ஸ்டாலின் கேள்வி!
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக கூறுகிறாரே முதல்வர் ஜெயலலிதா, அப்படியானால் சென்னை சென்டிரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் எந்தக் குற்றவாளியைக் கைது செய்துள்ளார்கள்.. திருச்சி ராமஜெயம் கொலையில் யாரைப் பிடித்தார்கள்.. பொட்டு சுரேஷ் கொலையில் யாரையாவது இதுவரை கைது செய்துள்ளார்களா என்பதை அவர் விளக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு பேசினார் ஸ்டாலின்.
ஸ்டாலின் பேச்சிலிருந்து....
எதிர்பார்த்து ஏமாந்தேன்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீல்குலைந்தது குறித்து நான் எழுப்பி வரும் கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் காவல்துறை மானிய கோரிக்கை மீதான அவரது பதில் உரை ஏமாற்றம் அளிக்கிறது.
மாண்பும் இல்லை.. மரபும் இல்லை
அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் சட்டசபையில் அமர்ந்து பிரச்சனைகளை விவாதிப்பது தான் மரபு. இந்த ஆட்சியில் அந்த ஜனநாயக மாண்பு இல்லை. எதிர்க்கட்சிகளை புறக்கணிக்கும் போக்குடன் செயல்படும், சபாநாயகர் தனபால் அந்த பதவிக்கே கரும்புள்ளியாக விளங்குகிறார்.
கேலி நேரமாகிப் போன கேள்வி நேரம்
முதல்வர் ஒருவர் கேள்வி நேரத்தையே புறக்கணிப்பது என்பது, இப்போதுதான் முதல் முறையாக நடக்கிறது. கேள்வி நேரம் இப்போது கேலி நேரமாக மாறிவிட்டது. எதிர்க்கட்சியினரை, குறிப்பாக திமுக தலைவர் கலைஞரை அவமதிக்கும் வகையில், கேள்வி நேரத்தில் ஆளும் கட்சியினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இப்படி ஒரு முதல்வரைப் பார்க்க முடியாது
கலைஞர் முதல் அமைச்சராக இருந்திருக்கிறார். அண்ணா முதல் அமைச்சராக இருந்திருக்கிறார். காமராஜர் முதல் அமைச்சராக இருந்திருக்கிறார். இப்படி பலர் முதல் அமைச்சராக இருந்த காலக்கட்டங்களில் எந்த முதல் அமைச்சரும், கேள்வி நேரத்தை புறக்கணித்திருந்ததை நாம் பார்த்திருக்க முடியாது. ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் பல நிகழ்ச்சிகளின் காரணமாக, அவசர பணியின் காரணமாக வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். கேள்வி நேரம் என்பது முக்கியமான நேரம். கேள்வி நேரத்திலே துணை கேள்விகளும் வரும். கேள்வி நேரத்தில் கேள்வி கேட்டு, அதற்கு அமைச்சர்கள் பதில் சொல்லியாகனும். அந்த கேள்வி நேரத்தை இந்த ஜெயலலிதா ஆட்சி கேலி நேரமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.
லாரி ஏற்றிக் கொல்கிறார்கள்
தமிழகத்தில் அரசும், தனியாரும் இணைந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தடுக்க முயற்சித்தாலோ, தட்டி கேட்டாலோ அவர்கள் லாரி ஏற்றி கொலை செய்யப்படுகிறார்கள்.
முடங்கிப் போன கொலை வழக்குகள்
பொட்டு சுரேஷ் கொலை, அத்வானி பைப் வெடிகுண்டு சதி, கே.என்.நேரு தம்பி கொலை, சென்னை சென்டிரல் ரயில் குண்டு வெடிப்பு என ஏராளமான வழக்குகள் விசாரணையிலேயே முடங்கி விட்டது. குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
குற்றச் செயல்களில் தமிழகம்தான் முதலிடம்
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்துள்ள கொலை, கொள்ளை சம்பவங்களைப் பாருங்கள். குற்றச் செயல்களில் தமிழகம் தென்னிந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும் உள்ளது என்றார் ஸ்டாலின்.