ஊழல் தடுப்பு துறை தலைவர் பதவிகளை நிரப்பாதது ஏன்? மு.க. ஸ்டாலின் கேள்வி
சென்னை: தமிழக அரசின் ஊழல்கள் தடுப்பு துறைகளின் தலைவர் பதவிகளை நிரப்பாமல் இருப்பது என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளதாவது:
அரசின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆங்காங்கே நடக்கும் ஊழல்களை கண்காணித்து தடுக்கவும் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு முக்கிய அரசு துறைகளின் தலைவர் பதவிகள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளதால் அந்த துறைகள் எல்லாம் செயலிழந்து நிற்கின்றன.
அடுத்தடுத்து ஊழல் புகார்கள் அதிரடியாக வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் கூட இந்த துறை தலைவர்களை நியமிக்க வேண்டும் என்ற எண்ணமும், பொறுப்பும் அதிமுக அரசுக்கு வரவில்லை.

தகவல் ஆணையர்
உதாரணத்திற்கு, மாநில தலைமை தகவல் ஆணையர் தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்டார். அவர் ஓய்வு பெற்ற பிறகும் இன்னும் அந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

விஜிலென்ஸ் கமிஷன்
அதே போல் "ஊழல் ஒழிப்புக்கு" முக்கிய துறையான விஜிலென்ஸ் கமிஷன் ஆணையர் பதவியும், லஞ்ச ஊழல் தடுப்புத் துறையின் இயக்குனர் பதவியும் இன்னும் நிரப்பப்படவில்லை. அந்தப் பதவிகளுக்கு முழு நேர அதிகாரிகளை நியமிக்கவும் இந்த அரசு முயற்சி மேற்கொள்ளவில்லை.

பணியாளர் தேர்வாணையம்
அதைவிட கொடுமையாக பல லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இன்றைக்கு தமிழகத்தில் தவிக்கிறார்கள். இந்த நேரத்தில் கூட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவர் நியமிக்கப்படவில்லை.
இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த நவநீதகிருஷ்ணன் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்குப் பதில் பணியாளர் தேர்வாணையத்தில் முழு நேர தலைவரை இதுவரை நியமிக்கவில்லை.

அரசுக்கு அட்வைஸ்
வெளிப்படையான நிர்வாகமும், ஊழல் ஒழிப்பும்தான் ஒரு ஆட்சியின் சிறந்த நிர்வாகத்திற்கு மட்டுமின்றி மாநில மக்கள் நலனுக்கும் மிக முக்கியமானது. அதற்குத் தேவையான முக்கியப் பதவிகளின் தலைமைப் பொறுப்பிற்கு அதிகாரிகளை நியமனம் செய்யாவிட்டால், ஆரோக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான நிர்வாகத்திற்கு தடையாக அமைந்து விடும்.
ஆகவே, எஞ்சியிருக்கும் ஆட்சி காலத்திலாவது நேர்மையான, தூய்மையான நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. அரசுக்கு அக்கறை இருந்தால், மேற்கண்ட முக்கிய பதவிகள் அனைத்திற்கும் முழு நேர துறைத் தலைவர்களை உடனடியாக நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications