ஓவர்.. ஓவர்.. இந்த ஆட்சியில் எல்லாமே ஓவர்.. ஓவர்.. ஓவர்தான்.. மு.க.ஸ்டாலின் 'நக்கல்ஸ்'!
சென்னை: அதிமுக அரசின் குறைகளைக் குறிப்பிட்டு நீண்ட உரையாற்றிப் பேசி வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தற்போது அதை நிறுத்தி விட்டு ஜெயலலிதா பாணியில் சிம்பிளாக பேச ஆரம்பித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவையே அதே பாணியில் கிண்லடித்தும் பேசி வருகிறார்.
இந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் எந்த ஒரு தலைவரின் பேச்சும் மக்களைக் கவரவில்லை என்று கூறப்படுகிறது. மக்களும் இவர்கள் என்னைத்தைப் பேசப் போகிறார்கள் என்ற மனோநிலைக்குப் போய் விட்டனர்.
இதனால் சிம்பிளாக பேச ஆரம்பித்துள்ளனர் தலைவர்கள். இந்த பாணிக்கு தற்போது மு.க.ஸ்டாலினும் தாவியுள்ளார்.

எல்லாமே ஓவர்தான்...
ஒரு கூட்டத்தில் அவர் பேசுகையில், அம்மா கார்டனைவிட்டு கிளம்பிட்டாங்க.. ஓவர், ஏர்போர்ட் கிளம்பிட்டாங்க... ஓவர், சிதம்பரம் வந்துட்டாங்க ஓவர், பேசி முடிச்சிட்டாங்க ஓவர், ஹெலிகாப்டர் ஏறிட்டாங்க ஓவர், கார்டனுக்குள்ள போயிட்டாங்க ஓவர்... இப்படி எல்லாமே ஓவர், ஓவர், ஓவர்தான். இந்த ஆட்சிக்கு ஓவர் சொல்லுங்கள் என்றார்.

செய்தீங்களா.. நீங்க சொன்னதைச் செய்தீங்களா...
அதேபோல ஜெயலலிதா ஒவ்வொரு முறையும் தனது பேச்சின்போது, செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா? என்று கேட்கிறார். இதையே ஸ்டாலின் உல்டா செய்து, செய்தீங்களா... நீங்க சொன்னதைச் செய்தீங்களா? என்று கேட்டு வாரி வருகிறார்.

சென்னையில் பிரசாரம்
இதற்கிடையே, நேற்று தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்துப் பிரசாரம் செய்தார் ஸ்டாலின். அப்போது அவர் பேசியதாவது...

வந்து போகக் கூடியவர்கள் அல்ல நாங்கள்
தேர்தலுக்கு தேர்தல் வந்து போக கூடியவர்கள் நாங்கள் அல்ல. எத்தகைய சூழலிலும் மக்களோடு இணைந்து, இரண்டற கலந்து இருப்பவர்கள் நாங்கள். நாங்கள் ஹெலிகாப்டரில் வரவில்லை. சாலை மார்க்கமாகத்தான் வருகிறோம். மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், பிரசாரத்திற்கு செல்லும் அமைச்சர்கள் விரட்டியடிக்கப்படுவதாக, பத்திரிகைகளில் தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

எதுவுமே செய்யவில்லை
கடந்த 3 ஆண்டு ஆட்சியில் அதிமுக அரசு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களோடுதான் நாங்கள் இருக்கிறோம். ஹெலிகாப்டரில் வந்தும் மக்களை பார்க்காத முதல்வர் ஜெயலலிதா, காடுகளில் யானைகளை பார்க்க செல்கிறார்.

குட்டி யானை முட்டுது
அண்மையில் முதுமலை சரணாலயத்துக்கு முதல்வர் செல்லும்போது, குட்டி யானை ஒன்று அவரை முட்டியது. ஏன் முட்டியது என்றால், நாட்டு மக்களை பார்க்காமல் என்னை பார்க்க வந்து விட்டாயே என்று நினைத்ததால்தான். ஐந்து அறிவு உள்ள யானைக்கே தெரிகிறது, முதல்வர் எப்படிப்பட்டவர் என்று.

புத்தி புகட்டுங்கள்
ஜெயலலிதாவுக்கு புத்தி புகட்ட, பாடம் புகட்ட, வருகிற தேர்தலில் திமுகவுக்கு வாக்களியுளிங்கள். திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அதன்பிறகு, ஆட்சி மாற்றம் எற்பட்டது. 2011ல் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா திட்டத்தையுமே காணொளி மூலமாகத்தான் திறந்து வைக்கிறார்.

ஒரு வார்த்தை கூட பேசவில்லை
நெம்மேலி கூட்டு குடிநீர் திட்டத்தை, அவருடைய சிறுதாவூர் பங்களாவுக்கு செல்லும் வழி என்பதால் நேரில் வந்து திறந்துவைத்தார். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்படி பேசியிருந்தால் திட்டத்தை கொண்டு வந்த திமுகவை பற்றி பேச வேண்டும் என்ற ஒரே காரணத்தால் எதுவுமே பேசவில்¬ல். திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், அதிமுக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்த முன்வரவில்லை.

ஒரே ஓவர்தான்...
முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்துக்கு செல்லும்போது அதிகாரிகள், முதல்வரின் ஹெலிகாப்டர் கிளம்பியாற்று ஓவர் என்றும், முதல்வர் ஹெலிகாப்டர் வானில் பறந்துவிட்டது ஓவர் என்றும், முதல்வர் ஹெலிகாப்டர் பாதி வழியில் வந்து கொண்டிருக்கிறது ஓவர் என்றும், விழா மேடை நோக்கி வந்து கொண்டிருக்கிறது ஓவர் என்றும், ஹெலிகாப்டர் இறங்கி விட்டது ஓவர் என்றும் சொல்லி கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு ஓவர், ஓவர் என்று சொல்லும் நிலை ஏற்படும்.

திமுகவுக்கு வாக்களியுங்கள்
மத்தியில் நிலையான ஆட்சி அமைந்திட, மதசார்பற்ற ஆட்சி உருவாகிட, திமுக தலைவர் கருணாநிதி சுட்டிக்காட்டும் ஒருவர் பிரதமர் ஆகிட, பொதுமக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

இது ஆட்சியல்ல. காணொளி காட்சி
தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது ஜெயலலிதா ஆட்சியல்ல, அது ஒரு காட்சி. காணொளி காட்சி ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வந்ததும் மக்களை பார்க்க பயந்து கொண்டு, மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அதிமுக அரசு கூறி வருகிறது. 2011 தேர்தலின்போது அதிமுக கொடுத்த உறுதி மொழி, வாக்குறுதி எதையுமே நிறைவேற்றவில்லை. அதை செய்வோம், இதை செய்வோம் என்றார்கள். எதுவும் செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்சார தட்டுபாடு இருக்காது என்றார்கள. தற்போது தமிழகத்தில் மின்சாரமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எல்லாமே உயர்ந்து போச்சு
பஸ் கட்டணம், பால் கட்டணம், மின் கட்டணங்கள் 3 மடங்கு, 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதிமுக அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் வருகிற தேர்தலில், திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

வேளச்சேரியில நான் குடியிருந்தபோது
நான் மேயராக இருந்தபோது வேளச்சேரியில் குடியிருந்தேன். அங்கு குடியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது வேளச்சேரிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தேன். இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டது. தற்போது மாநகராட்சி இங்கு எந்தவித பணியும் செய்யாததால் சிறு மழைக்கே வேளச்சேரி பகுதி வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது என்றார் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications