திமுக ஆட்சி அமைந்தால் சிறுபான்மையின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்: மு.க. ஸ்டாலின்
விழுப்புரம்: திமுக ஆட்சி அமைந்தால் சிறுபான்மை இன மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மாநாட்டுக்கு தலைமை தாங்கினார்.
இம் மாநாட்டின் சிறப்பு அம்சமாக பள்ளிவாசல், கபரஸ்தான், திருமணப் பதிவேடு ஆகியவற்றின் சிறந்த பராமரிப்பு, மதரஸா, கல்வி நிலையம், மருத்துவ மையம், பைத்துல் மால், ஷரீஅத் பஞ் சாயத்து உள்ளிட்டவை நடத்துதல், ஏழைக்குமர் திருமண உதவி, மாணவர்களுக்கு கல்வி உதவி போன்ற நல காரியங்களில் முன்மாதிரியாகத் திகழும் மஹல்லா ஜமாஅத்களுக்கு விருது வழங்கப்பட்டது.
அப்போது பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின், கருணாநிதி முதல்வராக இருந்த போதுதான் சிறுபான்மையினர் நல வாரியம் அமைக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சிறுபான்மையின மக்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடும் திமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டன. மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் சிறுபான்மையின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும் என கூறினார்.
மேலும், தமிழக சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் எதுவும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை எனவே அதிமுக ஆட்சியை அகற்ற ஒவ்வொருவரும் பிரச்சார பீரங்கிகளாக மாற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்..