எங்களுக்கும் தருமபுரம் ஆதீனத்துக்கும் காலம் காலமாக உள்ள நட்பு! உரிமையை விட்டுத்தராத ஸ்டாலின்!
மயிலாடுதுறை: தங்களுக்கும் தருமபுரம் ஆதீனத்துக்கும் இருக்கும் குடும்ப நட்பு குறித்து உரிமையை விட்டுக்கொடுக்காமல் பேசியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தருமை ஆதீனத்துக்கு கட்டுப்பட்ட 27 கோவில்களில் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள கோவிலும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான முதல்வர் ஸ்டாலின் பேச்சு வருமாறு;

''16ஆம் நூற்றாண்டில் குருஞான சம்பந்தரால் தொடங்கப்பட்ட மிக மிகப் பழமையான மடம், இந்த தருமை மடம். திருவில்லிப்புத்தூரில் பிறந்து, மதுரையில் ஞானம் பெற்று, திருவாரூருக்கு வந்து சேர்ந்த குருஞான சம்பந்தர் உருவாக்கியது இந்த மடம். அன்று முதல் இன்று வரை ஆன்மீகப் பணிகளிலும், தமிழ்ப் பணி - மருத்துவச் சேவை - கல்விப் பணி - அறப்பணி ஆகிய சமூக பணிகளிலும் தருமை மடம் ஈடுபட்டு வருகிறது.
1946ஆம் ஆண்டு தருமை ஆதீனத்தின் 25-ஆவது குருமகா சந்நிதானம் தொடங்கிய கல்லூரியின் வெள்ளிவிழாவில் 1972ஆம் ஆண்டு, முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களும், பொன் விழா நிகழ்ச்சியில், கல்வி அமைச்சராக இருந்த இனமானப் பேராசிரியர் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார்கள்.
கலைஞருக்கு திருவாரூர் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த மகா வித்துவான் ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் பின்னாட்களில் இந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார் என்ற சிறப்பும் இந்தக் கல்லூரிக்கு உண்டு என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தருமை ஆதீன மடத்துடன் தமிழ் நட்பு மட்டுமல்ல, எங்களுக்கு குடும்ப நட்பும் உண்டு. தருமை ஆதீனத்துக்கு கட்டுப்பட்ட 27 கோவில்களில் ஒன்றுதான் தலைவர் கலைஞரின் திருக்குவளை ஆகும். அதனால்தான் எங்களுக்கும் இந்த தருமை ஆதினத்துக்கும் குடும்ப தொடர்பு உண்டு என்று நான் கொஞ்சம் கம்பீரமாக, உரிமையோடு சொன்னேன்.
1972-ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற வெள்ளிவிழாவில் உரையாற்றிய தலைவர் கலைஞர் இன்னொரு தகவலையும் சொன்னார். அது என்னவென்று கேட்டால், நவகிரகங்களையும் ஒன்று சேர்த்து குடமுழுக்கு நடத்திய நேரத்தில் கொடிமரத்தைச் சுற்றுகிற பெண்கள் பாட்டுப் பாடுவது வழக்கமாம். அதுவரையில், அப்படி பாட்டு எழுதப்படாத சூழலில் அருகில் இருந்த எனது தாத்தா, தலைவர் கலைஞருடைய தந்தை, என் தாத்தா, முத்துவேலரிடம் சொல்லி ஒரு பாட்டு எழுதக் கேட்டு இருக்கிறார்கள்.
அப்போது அந்த இடத்திலேயே முத்துவேலரும் ஒரு பாடலை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். உடனடியாக தட்டி சுற்றும் பெண்கள் அதனை பாடி இருக்கிறார்கள். அதற்கு பிறகுதான் ஆலயத்துக்குள் நவகிரகங்களைக் கொண்டு சென்றார்களாம். இது கலைஞர் அவர்கள் சிறுபிள்ளையாக பார்த்த காட்சி. இதனை தலைவர் கலைஞர் அவர்களே தருமை கல்லூரி வெள்ளிவிழாவில் உரையாற்றும் போது சொல்லி இருக்கிறார். திருக்குவளை ஆலயத்திலும் முத்துவேலர் பணியாற்றி இருக்கிறார்.''












Click it and Unblock the Notifications