மாவட்ட செயலாளர் பதவிக்கு அடித்துக் கொண்ட ஸ்டாலினின் 'மதுரை' தளபதிகள் 'படு அப்செட்'!!
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தலில் மதுரை மாவட்ட ஸ்டாலினின் 'திடீர்' தளபதிகள் பலரும் தங்களுக்குள் மோதிக் கொண்ட சம்பவம் சுவாரசியமானது.
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி ஆதரவாளர்களான ஜெயராமன், கோ.தளபதி, வி.கே.குருசாமி, எஸ்ஸார் கோபி, மூர்த்தி, தமிழரசி, மிசா.பாண்டியன் அனைவரும் தற்போது ஸ்டாலின் ஆதரவாளர்கள். இவர்கள்தான் மதுரை மாவட்டத்து ஸ்டாலின் புதிய தளபதிகளும் கூட.
ஆனால் இந்த புதிய தளகர்த்தர்களிடையேதான் மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தலில் பெரும் மோதலே நிகழ்ந்திருக்கிறது.
மதுரை மாநகர (தெற்கு) செயலாளர் பதவிக்கு கோ.தளபதியும், ஜெயராமனும் மோதினர். இருவரையும் கைவிட ஸ்டாலினுக்கு மனமில்லை.
இதனால் ஜெயராமனுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி தருவதாகச் சொல்லி அவரை போட்டியில் இருந்து விலகச் சொல்லிவிட்டார் ஸ்டாலின். இதனால் தளபதி நிம்மதி பெருமூச்சுவிட ஜெயராமனோ ஏக்கத்துடன் இருக்கிறார்.
இதேபோல் மதுரை மாநகர் (வடக்கு) செயலாளர் பதவிக்கு வேலுச்சாமி விரும்பினார். ஆனால் சீனியர் பொன்.முத்து, மிசாபாண்டியன், வி.கே.குருசாமி ஆகியோரும் ஆர்வம் காட்டினர். ஒவ்வொருவருக்கும் சமாதானம் சொல்லி கடைசியாக விசுவாசி வேலுச்சாமியை வெல்ல வைத்திருக்கிறார் ஸ்டாலின்.
மதுரை புறநகர் (தெற்கு) மாவட்டத்தை விரும்பியது சேடப்பட்டி முத்தையா. தனக்கு தராவிட்டாலும் மகன் மணிமாறனுக்குத் தாருங்கள் என்று மன்றாடி கடைசியில் வென்றேவிட்டார் சேடபட்டியார்.
மதுரை புறநகர் (வடக்கு) மாவட்டத்துக்கு மூர்த்தி, தமிழரசி, எஸ்ஸார் கோபி குரூப் என பலரும் விரும்ப மூர்த்திக்கே சான்ஸ் கிடைத்தது.
அத்துடன் தமிழரசியோ பெண்கள் கோட்டாவில் தளபதி தன்னை மாவட்ட செயலாளராக்கிவிடுவார் என்று கனவு கண்டிருந்தார்..அவரது கனவும் நிறைவேறாமல் போகிவிட்டது. இதனால் 'எங்கே செல்லும்' இந்தப் பாதை என்ற புலம்பலில் இருக்கின்றனர் ஸ்டாலின் புதிய திடீர் தளபதிகள்.
இதனால் பதவி கிடைக்காத இன்றைய ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீண்டும் 'நாளை' அழகிரி ஆதரவாளர்களாக மாறும் அபாயமும் இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் மதுரை உடன்பிறப்புகள்.