மக்களுக்குடன் கைகுலுக்கி, குழந்தையை கொஞ்சி.. வீதி, வீதியாகப் போய் நன்றி தெரிவித்த ஸ்டாலின்
சென்னை: கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட தன்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு வீதி வீதியாக சென்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டார். ஏற்கனவே கொளத்தூர் எம்.எல்.ஏ. வாக இருந்த ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து மக்கள் மீண்டும் அவரையே தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில் தன்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
வீதி வீதியாக
கொளத்தூருக்கு சென்ற ஸ்டாலின் திறந்த ஜீப்பில் நின்று கொண்டு வீதி, வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். ஸ்டாலினை காண சாலையின் இரு புறங்களிலும் மக்கள் கூடியிருந்தனர்.
கை கொடுத்து
வாக்காளர்களின் கையை பிடித்து ஸ்டாலின் நன்றி தெரிவித்ததில் அவர்கள் நெகிழ்ந்துவிட்டனர். வாக்காளர்கள் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் மரியாதை செய்தனர்.
குழந்தையை தூக்கி
நன்றி தெரிவிக்க சென்ற இடத்தில் கைக் குழந்தையை தூக்கி கொஞ்சி, முதியவர்களுடன் கைக்குலுக்கினார் ஸ்டாலின். ஒரு எம்.எல்.ஏ. சாதாரண நபர் போன்று மக்களோடு மக்களாக இருக்க விரும்புவதை வாக்காளர்கள் வரவேற்றுள்ளனர்.
5 மணிநேரம்
மாலை 4 மணிக்கு கொளத்தூருக்கு சென்ற ஸ்டாலின் இரவு 9 மணி வரை வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர் கொளத்தூரின் கிழக்கு பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சென்று இரு கை கூப்பி நன்றி கூறினார். இன்று மேற்கு பகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார்.