நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்தாரா ஸ்டாலின்? சென்னை பிரசாரத்தில் சர்ச்சை
சென்னை: வாக்காளர் ஒருவர் நெற்றியில் வைத்த குங்குமத்தை வேண்டுமென்றே உடனேயே அழித்துவிட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில், எழும்பூர், தி.நகர், துறைமுகம் உள்ளிட்ட பல தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் இன்று திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.
மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நடந்து சென்று கை குலுக்கி, செல்போனில் செல்ஃபிகள் எடுக்க அனுமதித்தார்.
எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் கே.எஸ்.ரவிச்சந்திரன் ஆதரித்து, கே.வி.கார்டனில் ஸ்டாலின் வாக்கு சேகரித்தபோது, அங்குள்ள கோவிலை கடந்து சென்றார். அப்போது, ஸ்டாலின் நெற்றியில், ஒருவர் குங்குமம் வைத்து விட்டார்.
அந்த இடத்தை கடந்ததும், ஸ்டாலின் தனது கைக்குட்டையால் குங்குமத்தை அழிக்க தொடங்கினார். முழுமையாக அழியும்வரை மீண்டும் மீண்டும் கர்ஃசீப்பால் அதை துடைத்தார். இது அங்கிருந்த டிவி சேனல் வீடியோ கேமராவில் பதிவானது.
நெற்றியில் குங்குமம் இருப்பதை பார்த்து ரத்தம் வழிகிறதா என்று கருணாநிதி கேலி செய்ததாக கூறப்படுவதுண்டு. இப்போது அதே குங்குமம் சர்ச்சையில் ஸ்டாலினும் சிக்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஸ்டாலின் செயலுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.