கருப்பு சட்டை, காரில் கருப்பு கொடியுடன் ஸ்டாலின் நடை பயணம்
கருப்பு சட்டை அணிந்து கொண்டு கருப்பு கொடி கொண்ட காரில் ஸ்டாலின் தனது நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழகத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை, கருப்பு கொடியுடன் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நாகை அருகே நடைப்பயணத்தை தொடங்கினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
அதன்படி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் மு.க. ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு பயணத்தை கடந்த 7-ஆம் தேதி திருச்சி முக்கொம்பில் தொடங்கினார். 6 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் ராணுவ தளவாடங்கள் கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட கட்சிகளும், தமிழ், விவசாய அமைப்புகளும் கருப்பு கொடி காட்டுவோம் என்றும் கருப்பு உடை அணிவோம் என்றும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவோம் என்றும் தெரிவித்திருந்தனர்.
இன்று பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்தில் கருப்பு கொடி காட்டப்பட்டது. நாகை அருகே சீர்காழியில் காவிரி உரிமை மீட்பு 6-ஆவது நாள் நடைப்பயணத்தை தொடங்கினார் ஸ்டாலின்.
அப்போது அவர் கருப்பு சட்டை, பேண்ட் அணிந்திருந்தார். அவரது காரிலும் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது. முத்தரசனும் கருப்பு சட்டை அணிந்தபடி ஸ்டாலினுடன் நடைப்பயணம் மேற்கொண்டார்.