ஆர்.கே. நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றினால் மட்டும் போதாது... ஸ்டாலின்
ஆர்.கே. நகரில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்பட்டு பிரவீன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஆர்.கே. நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றியது வரவேற்கத்தக்கது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்தல் முறையாக நடக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான வேலுச்சாமி மீது பல்வேறு கட்சிகள் புகார் அளித்துள்ளன.
வேலுச்சாமி தனது பணியை முறையாக மேற்கொள்ளவில்லை என திமுக சார்பில் இன்று காலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இதே போன்று விஷால் வேட்புமனு விவகாரத்திலும் வேலுச்சாமி மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது.
பல புகார்கள் வந்ததை அடுத்து தேர்தல் அதிகாரி குறித்து ராஜேஷ் லக்கானி இன்று ஆலோசனை மேற்கொண்டார். தலைமை தேர்தல் கமிஷனுக்கும் இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வேலுச்சாமி மாற்றப்பட்டு, அவருக்கு பதில் பிரவீன் நாயர் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என ராஜேஷ் லக்கானி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வேலுச்சாமி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று மனு அளித்தோம். தேர்தல் அதிகாரியை மாற்றியது மட்டுமல்ல பணப்பட்டுவாடா முறைகேடுகளை தடுக்க வேண்டும். தேர்தல் முறையாக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.