திருவிழாக் கோலம் பூண்ட ஸ்ரீரங்கம்... பாதுகாப்புக்கு வந்த துணை ராணுவம்!
திருச்சி: திருவிழா என்றாலே ஜனக்கூட்டம்தான்... மாவிலை தோரணங்கள், வீடுகள் தோறும் கோலங்கள் களைகட்டும். ஆனால் ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் திருவிழா நடைபெற உள்ளதால் கலர்கலராக கட்சிக்கொடிகள், தோரணங்கள் வீதிகள் தோறும் கட்டப்பட்டுள்ளன.
இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 தினங்களே உள்ளதால் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், தொண்டர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதால் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

முகாமிட்டு முற்றுகை
அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி தொகுதி முழுவதும் சுற்றி வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் அடங்கிய கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் அலுவலகங்களை திறந்து, வீடுகள் தோறும் சென்று தினமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின் றனர். ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதே தங்களது இலக்கு என்கின்றனர் அதிமுகவினர்.

தெலுங்கு பேசும் கே.என்.நேரு
திமுக வேட்பாளர் என்.ஆனந்த், கடந்த திமுக ஆட்சியில் செய்த திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு வாக்கு சேகரிக்கிறார். முன்னாள் அமைச்சர் நேரு, கிராமங்களுக்குச் செல்லும்போது மக்களோடு மக்களாக அவர்களுக்கு புரியும்படி தமிழ், தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்து வருகிறார்.

களமிறங்கும் ஸ்டாலின்
திமுக தரப்பில் துரைமுருகன், கனி மொழி எம்.பி. பிரச்சாரம் செய்ய உள்ளனர். பிப். 7, 8, 9, 10 தேதி களில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

கலைக்குழு கம்யூனிஸ்ட்டுகள்
ஆடம்பரமில்லாமல் கலைக்குழுக்கள், ஆட்டோ மூலம் பிரச்சாரம், வீடுகள்தோறும் சென்று ஆதரவு திரட்டுவது, துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், என வழக்கமான பாணியில் பிரச்சாரம் செய்துவருகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.அண்ணாதுரை.

காலில் விழும் பாஜக சுப்ரமணியம்
பாஜக வேட்பாளர் எம்.சுப்ரமணியம், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கிராமப்புறங்களில் தெருக்களில் நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். வயதான வாக்காளர்களைக் கண்டால் காலில் விழுந்து வாக்கு கேட்பது இவரின் ஸ்பெஷாலிட்டி.

நடிகர் நெப்போலியன்
பாஜக சார்பாக அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார். எச்.ராஜா, இல.கணேசன், நடிகர் நெப்போலியன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

டிராபிக் செய்த ராமசாமி
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதியில் நேற்று மாலை அ.தி.மு.க வேட்பாளர் வளர்மதிக்கு ஆதரவாக அ.தி.மு.க கொள்கை பரப்பு துனை செயளாளர் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார், அப்பொழுது அந்த வழியாக வந்த சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமியின் கார் பழுதாகி நின்றது. காரில் இருந்து இறங்கிய டிராபிக் ராமசாமி தனது டிரைவரின் உதவியுடன் காரை பழுது பார்த்து கொண்டிருந்தார், அப்பொழுது அங்கு வந்த அ.தி.மு.க தொண்டர்கள் போக்குவரத்துக்கு இடையூராக நிறுத்தபட்டிருக்கும் ஜீப், மற்று காரை உடனே அப்புறபடுத்தும்படி கோஷமிட்டனர், மேலும் அவர்கள் டிராபிக் ராமசாமி முன்சென்று எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே, ஜெயலலிதா வாழ்க எனவும் கோஷமிட்டனர்.

பேனர்கள் அகற்றம்
சுயேச்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி, பேனர்களை அகற்றியதால் பாஜகவினருக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தேர்தல் பறக்கும் படையினர் 3 பிரிவுகளாக பிரிந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணாவுக்கு மாலை போட்டு
நேற்று அண்ணாவின் நினைவுநாள் என்பதால் ஸ்ரீரங்கத்தில் அண்ணா சிலைக்கு அதிமுக, திமுக என கட்சிப்பாகுபாடின்றி மாலை அணிவித்திருந்தனர். இதனால் மாலையை சுமக்கமுடியாமல் கொஞ்சம் வளைந்துதான் போனார் அண்ணா.

தீவிர கண்காணிப்பு
இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஆணையம் பணம் பட்டுவாடாவை தடுக்கவும், இலவச பொருட்கள் விநியோகத்துக்கு எதிராகவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

சாப்பாடு டோக்கன்
என்னதான் கண்காணிப்பில் ஈடுபட்டாலும் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் மிகப்பெரிய அளவில் விதிமுறை மீறலில் ஈடுபடுகின்றனர் என்பது திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். பொதுமக்களுக்கு டோக்கன் கொடுத்து 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பேட்டைவாய்தலை கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பில் மிகப்பெரிய பந்தல் அமைக்கப்பட்டு அங்கேயே தொடர்ந்து சமையல் செய்யப்படுவதாகவும் ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளனர்.

மூணு வேளையும்
காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை காலை உணவும், மதியம் 1 மணி முதல் 3 மணி வரை மதிய உணவும், இரவு 7 மணி முதல் 9 மணி வரை இரவு உணவும் வழங்கப்படும் என்று போர்டு எழுதி தொங்க விட்டுள்ளனர். இதை நாங்கள் புகைப்பட ஆதாரத்துடன் தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுகவினர் புகார் கொடுத்துள்ளனர்.

துணை ராணுவம் வருகை
துணை ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட 10 கம்பெனிகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.ஒரு கம்பெனிக்கு 65 வீரர்கள் மூலம் 650 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் முதல் கட்டமாக மணப்பாறை மற்றும் புறநகர் பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் துணை ராணுவத்தினர் இன்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சி வந்தனர். அவர்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வாக்குச்சாவடிகள், பதட்டமான பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

ஏதோ ஒண்ணு குறையுதே
தேர்தல் பிரச்சாரம் என்றாலே ஜெயலலிதாவின் ஹைடெக் வேன் பிரச்சாரம் களைகட்டும். ஆனால் அவர் போட்டியிட்டு பதவியிழந்த தொகுதியில் பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில் உள்ளார். அதேபோல திமுக தலைவர் கருணாநிதியும் பிரசாரத்திற்கு வரவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்தாலும் பிரசாரத்திற்கு வருவது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. எனவே நட்சத்திர பேச்சாளர்களின் பிரச்சாரம் இல்லாத காரணத்தால் தேர்தல் திருவிழா கொஞ்சம் களையிழந்துதான் உள்ளது.












Click it and Unblock the Notifications