உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது: மாநில தேர்தல் ஆணையம் இன்று தேதி அறிவிப்பு
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் தேதி குறித்து இன்று அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி என நான்கு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது, இந்த அமைப்புகளுக்கான 5 ஆண்டு பதவி காலம் வருகிற அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனால், அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை அக்டோபர் மாதம் திட்டமிட்டபடி நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் செலவுக்கான நிதியும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு உயர் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு அண்மையில் அறிவித்தது. இந்த நடைமுறை இந்த தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதனால் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் எந்தெந்த இடங்களை ஒதுக்கீடு செய்யலாம் என்ற பணியை அதிகாரிகள் ஏற்கனவே தொடர்ந்து நடத்தி வந்தனர். தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது.
வாக்காளர் பட்டியல், தொகுதி ஒதுக்கீடு மற்றும் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடு, ஊழியர்களுக்கு பயிற்சி ஆகியவையும் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்து விடும். அது மட்டுமல்லாமல் முதற்கட்டமாக தேர்தலை எந்தெந்த தேதிகளில் நடத்துவது என்பதையும் மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்து விட்டது. இதனால், எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே நிலவி வந்தது.
இதைத் தொடர்ந்து அதிமுக இன்று விருப்பமனுக்களை வாங்கத் தொடங்கியுள்ளது. திமுக, பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்படும் தேதியை அறிவித்துள்ளன. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலை கடந்த முறை போன்று 2 கட்டமாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.