காரைக்குடியில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்
காரைக்குடியில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன.
காரைக்குடி: தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் 59 வது குடியரசு தின விழா குழு விளையாட்டுப்போட்டிகள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியின் துவக்க விழா காரைக்குடி, அழகப்பா பல்கலைகழகத்தில் உள்ள பழனியப்ப செட்டியார் நினைவரங்கில் நடைபெற்றது. பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர்.ச.கண்ணப்பன் தலைமை வகித்தார். சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் செந்தி வேல்முருகன் அனைவரையும் வரவேற்றார்.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.சுப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளிக் கல்வி இணை இயக்குநர் பொன்னையா மற்றும் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பள்ளிக் கல்வி இயக்குநர் விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்து பேசும்போது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான தாக்கத்தை விளையாட்டு ஏற்படுத்தும் எனவே பள்ளி மாணவ மாணவிகள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக வட்ட, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காக தமிழக அரசு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் விளையாட்டு வாழ்க்கையை பக்குவப்படுத்தும்.விளையாட்டில் ஏற்படும் தோல்வி அடுத்தகட்ட வெற்றிக்கான உந்துதலை கொடுக்கும் என்றார்.
இவ் விழாவில் தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து மற்றும் பல்வேறு மாவட்டங்களின் உடற்கல்வி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராம சுப்ரமணியன் நன்றி கூறினார்.
அதனைத் தொடர்ந்து காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் நடைபெற்ற கைப்பந்து போட்டிகளை பள்ளிக் கல்வி இயக்குநர் துவக்கி வைத்தார். அதன் பின்னர் காரைக்குடி மற்றும் தேவகோட்டையில் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளை பார்வையிட்டு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார். சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் செந்தி வேல்முருகன் உடனிருந்தார்.