கடலூரில் வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்டித் தரப்படும்; ஓ. பன்னீர்செல்வம் உறுதி
கடலூர்: வெள்ளத்தால் பாதிப்படைந்த கடலூரில் வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்டித் தரப்படும் என்று தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தமிழக அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பார்வையிட்டனர். இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப்பணிகள் குறித்து கடலூரில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 6 அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சிறப்பாக பணியாற்றுகிறது. 15 ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்பட்டு 14 ஏரிகளில் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. வெள்ளத்தில் சேதமடைந்த 45 வீடுகளை ரூ.10 கோடி செலவில் சீரமைக்கப்படும். பாதிக்கப்பட்ட 45 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
போக்குவரத்து பாதிக்கப்பட்ட 9 வழித்தடங்களில் 7 வழித்தடங்களில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. 370 கி.மீ. தூர சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கடலூரில் வீராணம் உள்ளிட்ட ஏரிகள் மூலம் பாதிப்பு ஏற்படாதவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 210 கி.மீ. தூரத்திற்கு மின்கம்பிகள் மாற்றப்பட்டுள்ளன. கடலூரில் 683 ஊராட்சிகளில் 676க்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது. வெள்ளத்தால் பழுதடைந்த 1,850 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
மேலும், கடலூரில் சீரமைப்பு பணிகள் வரும் 18ம் தேதிக்குள் முழுமை பெறும் என்று அமைச்சர்கள் கூட்டாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications