சேலம் தலைவெட்டி முனியப்பன் கோவில், புத்த வழிபாட்டு தலம்-நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்புக்கு தடை!
சென்னை: சேலம் பெரியேரி தலைவெட்டி முனியப்பன் திருக்கோவில் ஒரு புத்த மத வழிபாட்டு தலம் என்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் இருநீதிபதிகள் பெஞ்ச் இன்று அதிரடி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனைக்கு எதிரே பெரியேரி கிராமம், கோட்டை சாலையில் அமைந்திருக்கும் தலைவெட்டி முனியப்பன் திருக்கோயில் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தலைவெட்டி முனியப்பன் திருக்கோயில் அல்ல, இது புத்த மத வழிபாட்டுத் தலம் என்றும், இதில் இந்து சமய அறநிலையத்துறை எவ்வித உரிமையும் கோர முடியாது என்று தீர்ப்பளித்திருந்தார்.

2011-ம் ஆண்டு இந்திய புத்த சங்கத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. சேலம் தலைவெட்டி முனியப்பன் கோவில் சிலையானது,
அர்த்தபத்மாசனம் எனப்படும் அமர்ந்த நிலையிலான புத்தர் சிலையாகும்; தியான முத்ரா கொண்டு உள்ளது என்ற தொல்லியல் துறையின் அறிக்கையின் அடிப்படையில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.
மேலும் சேலம் தலைவெட்டி முனியப்பன் கோவிலில் உள்ளது புத்தர் சிலையே என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்; இந்த இடத்தை தொல்லியல் துறை தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தமது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த தீர்ப்பினை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் சார்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பாக அரசு சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவெட்டி முனியப்பன் என்றே பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் 1991-ல் இயற்றப்பட்ட வழிபாட்டு தலங்கள் சட்டப்படி 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம்தேதிய அன்றைய தினத்தில் வழிபாட்டு தலமாக இருக்கும் எந்த ஒரு கோவிலையும் மாற்றம் செய்ய இயலாது என்று வாதிட்டார். தலைவெட்டி முனியப்பன் கோவிலை புத்தர் கோவிலாக ரிட் வழக்கில் உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும் வாதிட்டார்.
இதனை ஏற்ற நீதிபதிகள் மேல்முறையீட்டு வழக்கினை ஏற்றுக்கொண்டு, சேலம் தலைவெட்டி முனியப்பன் கோவில் ஒரு புத்த மத வழிபாட்டுத் தலம் என்ற தனிநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தனர்.












Click it and Unblock the Notifications