ஜெயலலிதா வீட்டைக் கைப்பற்றும் முயற்சிகள்... தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லத்தைக் கைப்பற்ற முயற்சிகள் நடக்கும் நிலையில் அவற்றை முறியடிக்கும் முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன. இதனால் மீண்டும் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அதிமுகவில், தமிழக அரசியலிலும் நாளுக்கு நாள் குழப்பங்களும் சிக்கல்களும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் ஜெயலலிதா இல்லத்தை சொந்தம் கொண்டாடி கைப்பற்றும் முயற்சிகள் தீவிரமாகியுள்ளன.
ஜெயலலிதாவின் சொந்த அண்ணனின் பிள்ளைகள் மூலமே அவரின் போயஸ் இல்ல வீடு கைப்பற்றப்படும் சூழல் நிலவுகிறது. இது அதிமுகவிற்கு மிகப்பெரும் பின்னடைவு என்றும், சசிகலா- தினகரன் தரப்புக்கு மிகப்பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ள விஷயம் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
நேற்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா போயஸ் கார்டன் இல்லத்திற்கு காலை 9 மணிக்குச் சென்றார். அங்கே இருந்த தனியார் நிறுவன பாதுகாவலர்கள் தீபாவை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதில் ஆவேசம் அடைந்த அவர் அருகில் இருந்த ஆங்கில சேனல் ரிப்போர்ட்டரையும் கேமிரா மேனையும் உள்ளே அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். அதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் உள்ளே சென்ற தீபா, ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதை அவசரகதியில் செய்துமுடித்த தீபா, தனக்கு எதிர்ப்புக் காட்டிய பாதுகாவலர்களிடம் வாக்குவாதமும் செய்துள்ளார்.

அடி உதை
இதில் ஆத்திரமடைந்த பாதுகாவலர்கள், அங்கு நடந்தவற்றைப் படம் பிடித்த ஆங்கில சேனலின் செய்தியாளரையும் கேமிராமேனையும் தீபாவையும் தாக்கி உதைத்துள்ளனர். இதில் பத்திரிக்கையாளர்கள் மண்டை உடைந்தது. தீபா கோபத்தின் உச்சத்துக்கே போனார்.

தீபக் மீது வசை மாரி
தன்னை போன் போட்டு வரவழைத்தது தீபக் தான். போயஸ் கார்டன் இல்லத்துக்கு வா அத்தையின் படத்துக்கு மரியாதை செலுத்துவோம் என்று கூறி அழைத்தது தீபக் தான். ஆனால் நடந்தது வேறு.

அத்தையைக் கொன்ற தீபக்
சசிகலாவிடம் பணம் வாங்கிக்கொண்டு வாழ ஆசைப்பட்டு அத்தையை கொன்றுவிட்டான் தீபக் அதுக்கு என்கிட்டே ஆதாரங்கள் இருக்கு. அதை வைச்சு சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் போயஸ் இல்லத்தை மீட்பேன் என்று சபதம் செய்தார் தீபா.

ஆள்வைத்து அடித்து துரத்தினார்கள்
இதையெல்லாம் முன்னாடியே எனக்கு நன்கு தெரியும் என்பதால்தான் இன்று ஆள்வைத்து என்னை அடித்து வெளியே துரத்தினர் என்று கொந்தளித்தார் தீபா. தீபா உள்ள வரக்கூடாது என்று சொல்லும் சக்தி தீபக்கை உள்ள வசிக்க அனுமதித்துள்ளது. அந்த சக்தி சசிகலா தான் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது தீபா அங்கே செல்ல முயன்றதும், உள்ளே தீபக் இருப்பதும் யோசிக்க வேண்டிய ஒன்று.

தீபக் சிக்கல் இல்லை
சசிகலா தரப்பு தீபக் எப்போதும் நமக்கு பிரச்சனையில்லை. தீபா தான் பிரச்சனை என்று வலுவாகக் கருதுகிறது. அதற்கு ஏற்றவகையில் தீபாவும் கட்சி ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார். அது தங்களின் வளர்ச்சிக்கு எப்போதுமே இடைஞ்சல் என்று கருதுகிறது சசிகலா தரப்பு.

சசிகலா கட்டுப்பாடு
போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லம் முழுக்க முழுக்க சசிகலா கட்டுப்பாட்டில் அவர் ஏற்பாடு செய்த தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பில்தான் இப்போதும் இருக்கிறது. அவரின் திட்டப்படிதான் நேற்றைய கலவரம் நடந்துள்ளது என்கிறார்கள் போயஸ் வட்டாரத்தில். சட்டப்படி வழக்குகள் தொடுக்கப்பட்டு, நீதிமன்றம் ஏதாவது உத்தரவு வழங்கினால்தான் போயஸ் இல்ல சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரும் என்று அதிமுக சீனியர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications