ஸ்டெர்லைட்: நில ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்ய இடைக்கால தடை.. மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி
ஸ்டெர்லைட் 2வது யூனிட்டுக்கு நிலம் ஒதுக்கிய உத்தரவை அரசு ரத்து செய்ததற்கு மதுரை ஹைகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை: ஸ்டெர்லைட் 2வது யூனிட்டுக்கு நிலம் ஒதுக்கிய உத்தரவை அரசு ரத்து செய்ததற்கு மதுரை ஹைகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த வருடம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அரசு அனுமதி அளித்தது. இதில் இருந்துதான் மக்கள் போராட்டம் உச்சம் அடைந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு தெரிவித்தும் கூட ஆலை விரிவாக்கத்திற்கு சிப்காட் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது.
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள 624 ஏக்கர் நிலத்தில், 324.23 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு சிப்காட்டிடம் இருந்து ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றுள்ளது. சிப்காட் 2 என்ற புதிய தொழில்பூங்கா செயல்பட அரசு இன்னும் அனுமதி வழங்காத நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு , விரிவாக்கத்திற்காக எப்படி நிலம் ஒதுக்கப்பட்டது கேள்வி கேட்டு புகார் அளிக்கப்ட்டது.
ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியை பாத்திமா வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது இதுகுறித்த வழக்கு விசாரணையில் உள்ளது. வழக்கில் கடந்த மாதம் மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு ஒன்று பிறப்பித்து இருந்தது.
[ நெல்லையில் மேலும் ஒரு வழக்கு... முன்ஜாமீன் கோரி கருணாஸ் விண்ணப்பிப்பு ]
அதில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது. இதனால் அரசு விரிவாக்கத்திற்காக அளித்த நிலத்தை திரும்ப பெற முடிவு செய்தது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் மதுரை ஹைகோர்ட்டில் மீண்டும் முறையீடு செய்தது.
அந்த வழக்கில் தற்போது மதுரை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் 2வது யூனிட்டுக்கு நிலம் ஒதுக்கிய உத்தரவை ரத்து செய்ததற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. சிப்காட் நிர்வாகம் ஒதுக்கிய நிலத்தை அரசு திரும்பப் பெற இடைக்கால தடை விதித்துள்ளது.