தூத்துக்குடியில் இரவில் வீடு புகுந்து இளைஞரைத் தாக்கி இழுத்துச் சென்ற போலீஸ்.. பரபரப்பு வீடியோ
தூத்துக்குடியில் நேற்று மின் இணைப்புகளைத் துண்டித்துவிட்டு இரவு முழுக்க போலீஸ், ஒவ்வொரு வீடாக சென்று அங்குள்ள ஆண்களை தாக்கியதாக தகவல்கள் கூறுகின்றன
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று இணைய மற்றும் மின் இணைப்புகளை துண்டித்து விட்டு இரவு முழுக்க போலீஸ், ஒவ்வொரு வீடாக சென்று அங்குள்ள ஆண்களை தாக்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இது நேற்று முதல் நாள் இரவும் நடந்தது. ஆனால் அப்போது இந்த விஷயம் அப்பட்டமாக வெளியே தெரிந்ததால், நேற்று இணையத்தை நிறுத்திவிட்டு மக்களை தாக்கியுள்ளனர். ஆண்களை மட்டுமில்லாமல் பெண்களையும் மோசமாக தாக்கியுள்ளனர்.
போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 25க்கும் அதிகமானோர் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. 100க்கும் அதிகமானோர் மோசமான உடல்நிலையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளே வெளியே
நேற்று காலையிலேயே தூத்துகுடிக்குள் யாரும் வர கூடாது, தூத்துக்குடியை விட்டு யாரும் வெளியே செல்ல கூடாது என்று அறிவித்து இருந்தது போலீஸ். தூத்துக்குடிக்குள் இருக்கும் இளைஞர்களை கைது செய்யவும், துன்புறுத்தவும் வசதியாக இப்படி அறிவித்து இருந்தார்கள் போலும். அதையும் மீறி சில இளைஞர்கள் ஊரை விட்டு வெளியேறி திருநெல்வேலியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இணையம் துண்டிப்பு
அதன்பின் நடக்கும் கொடூரங்கள் உலகிற்கு தெரியக்கூடாது என்பதால் , இணைய வசதியை துண்டிக்க ஆணையிட்டு இருக்கிறார்கள். மத்திய அரசின் உள்துறையின் அறிவுரையின் பேரில், மாநில அரசின் உள்துறை இந்த வசதியை போலீசுக்கு செய்து கொடுத்துள்ளது. ஆனால் வீடியோ எடுப்பதையும், அதை இணையம் வந்த பின் வெளியிடுவதையும் அவர்களால் தடுக்கவே முடியாது. அதேபோல் நேற்று சில இடங்களில் மட்டும் இணையம் வேலை செய்துள்ளது.
மோசமாக தாக்கி இருக்கிறார்கள்
இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக ஒவ்வொரு வீடாக சென்று அந்த வீட்டில் இருக்கும் ஆண்களை தாக்கி இருக்கிறார்கள். மோசமாக கல்லால் அடித்து, லத்தியால் அடித்து தாக்கியுள்ளனர். காஷ்மீரில் ராணுவம் வீடு புகுந்து தாக்குவது போல இளைஞர்களை குறி வைத்துள்ளனர். இளைஞர்களை மட்டுமில்லாமல், பெண்களை, தாய்மார்களையும் தாக்கியுள்ளனர். இனி இந்த ஊரில் ஒருத்தரும் போராடக்கூடாது என்று மோசமாக தாக்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன பாவம் செய்தனர்
நேற்று சில இடங்களில் இருந்த இணைய வசதியை வைத்துக் கொண்டு, போலீஸ் செய்யும் கொடூரங்களை மக்கள் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள். நேற்று ஒரு வீட்டிற்குள் புகுந்த போலீஸ், அங்கு இருந்த சிறுவனை வெளியே இழுத்து வந்து அடித்து இருக்கிறார்கள். இதை எதிர் வீட்டில் இருந்த பெண்கள் படம் பிடித்து துணிச்சலாக வெளியிட்டுள்ளனர். இந்த கொடூரமான வீடியோ மனதை பதைபதைக்க வைக்கிறது.