சத்தியமங்கலம் அதிவிரைவுப்படை போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை.. பணிச்சுமையா என விசாரணை
அதிவிரைவுப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்டார்.
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அதிவிரைவுப்படை போலீஸ்காரர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலத்தை சொந்த ஊராக கொண்ட கோபி என்பவர், சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் அலுவலகத்தில் போலீஸ்காரராக பணி புரிந்தவர் வயது 38. இவர் சிறப்பு அதிரடிப்படை அலுவலக வளாகத்திலுள்ள குடியிருப்பு பகுதியில் தங்கி வந்து வேலைக்கு சென்று வந்தார். இவரது மனைவியும், 8 வயது மகளும் விருத்தாச்சலத்திலேயே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கோபி தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பமும் ஊரில் உள்ள நிலையில் கோபியின் தற்கொலை குறித்து உடனடி காரணம் எதுவும் தெரியவில்லை.
தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் உடனடியாக கோபியின் மரணம் குறித்து குடும்பத்தாரிடம் தகவலை தெரிவித்தனர். பின்னர் கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த தற்கொலை குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். பணிச்சுமையால் கோபி தற்கொலை செய்துகொண்டாரா? குடும்ப சூழலா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.