பணம் இன்றாவது கிடைத்துவிடுமா? திறந்துகிடக்கும் ஏடிஎம் மையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
திறக்கப்பட்டுள்ள ஒன்றிரண்டு ஏடிஎம் மையங்களிலாவது பணம் கிடைத்துவிடுமா என மக்கள் கூட்டம் அலைமோதிவருகிறது.
சென்னை: 3வது நாளாக இன்றும் ஏடிஎம்கள் சரிவர திறக்கப்படாமல் உள்ளது. இதனால், திறந்திருக்கும் சில ஏடிஎம் மையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
கடந்த 9ம் தேதியில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும், 10ம் தேதியில் இருந்து வங்கிகள், அஞ்சலகங்களுக்கு சென்று பழைய ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. 4000 ரூபாய் வரை மட்டுமே மாற்றக் கொள்ள முடியும் என்றும், மீதிப் பணத்தை அவரவர் கணக்குகளில் வரவு வைத்துக் கொண்டு பின்னர் எடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறியது.
இந்நிலையில், 10ம் தேதியில் இருந்து வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் பணத்தை மாற்றிக் கொள்ள மக்கள் கூடினார்கள். வங்கிகளில் கூடிய கூட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாததால் அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட பணம் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
இதனையடுத்து, ஏடிஎம் 11ம் தேதியில் இருந்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன. திறந்திருக்கும் ஒரு சில மையங்களிலும் கூட்டம் அலை மோதி வருகிறது.
புதிய 500 ரூபாய் நோட்டை மத்திய அரசு இன்னும் வெளியிட வில்லை. வெளியிடப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டை ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்துவதற்கான வசதிகள் இல்லை. 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளுக்கும் தட்டுப்பாடு உள்ளது. இப்படி பல்வேறு காரணங்கள் இருப்பதால் மக்களுக்கு தேவையான பணத்தை ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்ப முடியாத சூழல் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் 3வது நாளாக இன்றும் மக்கள் ஏடிஎம் வாசல்களில் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கான பணத்தை எடுத்து வருகின்றனர். வரிசையில் கடைசியாக நிற்பவர், முன்னால் இருப்பவர்கள் எல்லோரும் பணம் எடுத்துவிட்டால் தங்களுக்கு கிடைக்குமா என்ற பதற்றத்துடனேயே காத்துக்கிடக்கின்றனர்.