'மம்மி'யின் இலவசங்களால் இற்றுப் போன 'அம்மி' உற்பத்தி -தேர்தலில் எதிரொலிக்குமா...?
மேட்டூர்: அதிமுக அரசால் வழங்கப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டர் திட்டத்தால் மக்கள் பயனடைந்தார்களோ இல்லையோ, அம்மி,உரல் தொழிலாளர்களின் வாழ்க்கைதான் நசிந்து விட்டது.
உற்பத்தியும் படுத்துவிட்டதால் கஞ்சிக்கே கஷ்டப் படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அம்மி,உரல் உற்பத்தியாளர்கள்.
இத்தகைய காரணங்களால் அந்த தொழிலை நம்பியுள்ள ஏராளமான குடும்பத்தினர் அதிமுக அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அம்மி,உரல் தயாரிப்பாளர்கள்:
தமிழகத்தில் அம்மி, உரல், ஆட்டுக்கல் தயாரித்து விற்பனை செய்யும் ஏராளமான தொழிலாளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் மாநிலம் முழுவதும் கிராமம் கிராமமாக சென்று ஒரு கிராமத்தில் ஒரு மாதம் முதல் ஆறு மாதம் வரை தங்கி அம்மி, உரல் தயாரித்து விற்பனை செய்வது வழக்கம்.
மகிழ்ச்சியான வாழ்க்கை:
கிராமங்களில் மிக்ஸி, கிரைண்டர் உபயோகம் குறைவு என்பதால் கல்லில் தயாரித்த அம்மி உரலை பொதுமக்கள் பயன்படுத்தினர். அதற்கேற்ப விற்பனையும் நன்றாக இருந்ததால் அம்மி, உரல் தயாரிக்கும் தொழிலாளர் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக கழிந்தது.
பரிதவிக்கும் தயாரிப்பாளர்கள்:
ஆனால் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து அம்மி, ஆட்டுக்கல், உரல் விற்பனை படுத்து விட்டது. இதனால் மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் அம்மி மற்றும் உரல் தயாரிக்கும் குடும்பத்தினர் வருமானம் இன்றி , சில நேரங்களில் உணவுக்கு கூட வழியின்றி பரிதவிக்கின்றனர்.
விற்பனை மோசம்:
இதுபற்றி அம்மி,உரல் உற்பத்தி தொழிலாளர்கள், "நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக அம்மி ஆட்டுக்கல் தயாரித்து விற்கிறோம். கடந்த 2011 ஆம் ஆண்டு வரை கிராமங்களில் அம்மி, ஆட்டுக்கல் விற்பனை நன்றாக இருந்தது. மின்தடையால் நகரங்களிலும் ஆட்டுக்கல், அம்மி விற்பனை அதிகரித்தது.
படுத்துவிட்ட அம்மி வியாபாரம்:
எதிர்பார்த்த வருவாய் கிடைத்ததால் எங்கள் குடும்பமும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், தற்போது கிராம மக்கள் மிக்ஸி , கிரைண்டர் பயன்படுத்த துவங்கி விட்டதால் எங்களின் அம்மி, ஆட்டுக்கல் வியாபாரம் படுத்து விட்டது.
விலைவாசியும் உயர்வு:
மேலும் விலைவாசி உயர்வு காரணமாக மிக்ஸி, கிரைண்டருக்கு இணையாக ஆட்டுக்கல், அம்மி ஆகியவற்றை குறைந்தபட்சம் 1200 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உணவுக்கே தட்டுப்பாடு:
அதிமுக அரசு வழங்கிய இலவச பொருட்கள் விலைவாசி உயர்வால் எங்கள் தொழில் நலிவடைந்து விட்டது.வேறு தொழிலும் தெரியாது என்பதால் அம்மி, ஆட்டுக்கல் தயாரிக்கும் நாங்கள் சில நாளில் உணவுக்கே சம்பாதிக்க முடியாமல் அவதிப்படுகிறோம். தொழிலை இழந்து தவிக்கும் எங்களை காப்பாற்ற இதுவரை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது வேதனையாக உள்ளது" என்று தெரிவித்தனர்.
தேர்தலில் தெரியும் முடிவு:
விலையில்லா மிக்ஸி கிரைண்டர் வழங்கியதால் மாநிலம் முழுவதும் அம்மி , ஆட்டுக்கல் தயாரிக்கும் தொழிலாளர் குடும்பத்தினர் அதிமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இது லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.