"சுப்பிரமணியபுரத்தில்" மு.க.ஸ்டாலின் பிரசார வேன் மீது கல்வீசிய அழகிரி ஆதரவாளர்!!
மதுரை: மதுரையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேன் மீது மு.க. அழகிரியின் ஆதரவாளர் ஒருவர் கல்வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை லோக்சபா தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து மதுரையில் பல்வேறு இடங்களில் நேற்று திறந்தவேனில் இருந்தபடி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். புதூர், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பிரசாரம் செய்து விட்டு, சுப்பிரமணியபுரம் பகுதியில் வேனில் இருந்தபடி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் நின்று இருந்த ஒருவர்திடீரென்று தகராறு செய்துள்ளார். இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அங்கிருந்து செல்ல மறுத்த அவர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார்.
அத்துடன் திடீரென்று அந்நபர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டார். இதில் ஒரு கல் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த வேன் மீது விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கல்வீசிய நபரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் கல்வீசியவரும் திமுகவைச் சேர்ந்தவர் என்றும் ஆனால் மு.க. அழகிரியின் ஆதரவாளர் என்பதும் தெரியவந்தது. இதனால் திமுகவினர் எந்த புகாரும் கொடுக்காமல் சென்றுவிட்டனர். போலீசாரும் அந்நபரை விடுவித்துவிட்டனர்.