வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை- கடலூரில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடலூர் துறை முகத்தில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பரவலாகக் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக பெய்த கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் அருகே அஞ்செட்டி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம்மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது, அது மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாறவும் வாய்ப்புள்ளது . இதனால் தமிழகத்திற்கு கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தமிழகத்தின் கடலோர மாவட்டமான கடலூரில் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.