நெல்லையில் குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் திடீர் மயக்கம்...
நெல்லை: நெல்லை அருகே பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சடையன்கிணறு கிராமத்தில் உள்ள துவக்கபள்ளியில் 22-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஈராசிரியர் பள்ளியான அங்கு தலைமை ஆசிரியர் சுப்புலெட்சுமி, உதவி ஆசிரியர் பாலமுருகன் ஆகியோர் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் மதியம் மாணவர்களுக்கு கீரை சாதம் வழங்கப்பட்டது.
சாதம் சாப்பிட்ட உடன் மாணவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வழங்கப்பட்ட குடற்புழு நீக்க மாத்திரையை ஆசிரியர் வழங்கினார். இதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் பாலன், முத்துகுமார், அருண்குமார், பாபா, முத்துராஜா, சிவந்தகனி, அம்சு, முகேஷ் ஆகியோர் திடீரென மயக்கமடைந்து விழுந்தனர். இதனை அறிந்த இதர மாணவர்கள் மாத்திரையை வாயில் இருந்து எடுத்து வெளியே துப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் ஆனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ஜலின் சுமதி பள்ளிக்கு விரைந்து வந்து பரிசோதனை நடத்தினார். பின்னர் அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார். உணவு முறையாக சாப்பிடாமல் இந்த மாத்திரையை சாப்பிட்டதால் மாணவர்கள் மயங்கி இருக்கலாம் என அவர் தெரிவித்தார். குடற்புழு நீக்க மாத்திரையை சாப்பிட்ட மாணவர்கள் மயங்கி விழுந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.