அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதூர படிப்புகளில் சேர வேண்டாம்.. யூஜிசி எச்சரிக்கை
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி தொலைநிலை படிப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு பல்கலைக்கழங்களிலும் தொலை நிலை படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் இந்த படிப்பு உதவியாக உள்ளது.
இதனால் நாள்தோறும் தொலைநிலை படிப்புகளில் சேர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்கலைக்கழகங்களில் தொலைநிலை படிப்புகள் கற்பிக்க முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

குற்றச்சாட்டு
இந்நிலையில் தான் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அங்கீகாரமின்றி தொலைநிலை படிப்புகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இங்கு சுமார் 200க்கும் அதிகமான தொலைநிலை படிப்புகள் கற்பித்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு எழுந்தது.

அங்கீகாரமின்றி மாணவர் சேர்க்கை
இந்நிலையில் தான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புகளில் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) எச்சரித்து இருக்கிறது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலர் ரஜனீஷ் ஜெயின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‛‛சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் யூஜிசி அங்கீகாரம் பெறாமல் தொலைநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்த்து வருகிறது. இது, தொலைநிலை படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை முழுமையாக மீறும் செயல்.

அனுமதி கிடையாது
யூஜிசி அங்கீகாரம் பெறாமல், எந்த உயர் கல்வி நிறுவனமும், தொலைநிலை, திறந்த நிலை மற்றும், 'ஆன்லைன்' படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது. அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு 2014-15ம் ஆண்டு வரை மட்டுமே தொலைநிலை படிப்புகளை நடத்த அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதன்பின், அந்த படிப்புக்கு அங்கீகாரம் பெறவில்லை.

மாணவர்கள் சேர வேண்டாம்
எனவே, யூஜிசி அங்கீகாரம் பெறாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகள் செல்லத்தக்கதல்ல. இந்த படிப்புகளுக்கு பயன் கிடைக்காமல், வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டால் அந்த பல்கலைக்கழகம் தான் முழுப்பொறுப்பு. இதனால் அப்பல்கலை நடத்தும் தொலைநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம். அங்கீகாரம் பெறாத பட்டப் படிப்புகளில், மாணவர்களை சேர்த்து வருவது மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications