பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்களுக்கு சராமரியாக அடி, உதை- 4 மாணவர்கள் தலைமறைவு
நெல்லை: நெல்லை அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்களை தாக்கிய பிளஸ்டூ 2 மாணவர்கள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு100க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாலையில் வகுப்பு முடியும் தருணத்தில் 10ம் வகுப்பு மாணவி ஓருவரிடம் 8ம் வகுப்பு மாணவர் ஒருவர் வந்து வெளியே ஒருவர் நிற்பதாகவும், அவர் உங்களை அழைத்து வர சொன்னார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவி வெளியே சென்று பார்த்து விட்டு அந்த நபர் யார் என்று தெரியவில்லை என்று கூறி வகுப்பறைக்குள் சென்று விட்டார். ஆனால் அந்த, மாணவர் மீண்டும் அதே போன்று கூறவே ஆத்திரம் அடைந்த மாணவி இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார்.
இந்த நிலையில் பள்ளிக்கு வெளியே நின்று கொண்டிருந்த 4 மாணவர்கள் திடீரென தலைமை ஆசிரியர் அறைக்குள் புகுந்தனர். இதை பார்த்த அங்கிருந்த ஆசிரியர்கள் அவர்களை தடுத்தனர். இதில் ஆசிரியர் செல்வராஜ் என்பவர் காயம் அடைந்தார். மேலும் அதை தடுத்த தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், ஆசிரியர் விஜயன் ஆகியோரும் தாக்கப்பட்டனர்.
இதற்கிடையே ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஊர் மக்களிடையே சென்று தெரிவித்ததால் அவர்கள் பள்ளிக்கு விரைந்தனர். பொது மக்கள் திரண்டு வருவதை பார்த்த நான்கு மாணவர்களும் இருசக்கர வாகனங்களை எடுத்து கொண்டு தப்பி சென்றனர்.
காயமடைந்த ஆசிரியர் செல்வராஜ் அரசு மருத்துவமையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தாழையூத்து போலீசில் அவர் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சோனமுத்து வழக்கு பதிந்து ஆசிரியர்களை தாக்கிய பள்ளி மாணவர்கள் 4 பேரையும் தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications