மேற்கு தொடர்ச்சி மலையில் ஜன. 3 முதல் புலிகளை தேடப்போறாங்க!
புலிகள் கணக்கெடுப்பு அடுத்த மாதம் மூன்றாம் தேதி தொடங்கப்பட இருக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நெல்லை: புலிகள் கணக்கெடுப்பு வரும் மூன்றாம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருப்பதாக கருதப்படுகிறது. தேசிய புலிகள் ஆணையம் சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதன் பின்னர் 4 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஜனவரி 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது.
இதனை முன்னிட்டு வனத்துறை ஊழியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான பயிற்சி முகாம் களக்காடு தலையணையில் நடந்தது. இதற்கு களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ தலைமை வகித்தார். இந்த பயிற்சி முகாமில் களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு, சரகங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.