நட்ட நடுரோட்டில் “டமால்” ஆன அரசு பஸ் படிக்கட்டு - தாம்பரம் பள்ளி மாணவர்கள் காயம்
சென்னை: தாம்பரம் முடிச்சூர் அருகே மாநகர பஸ் படிக்கட்டு உடைந்து பள்ளி மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் மண்ணிவாக்கத்தில் இருந்து தாம்பரத்துக்கு தடம் எண் 55 மாநகர பஸ் இன்று காலை வந்து கொண்டு இருந்தது. காலை நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். முடிச்சூர் மணிமங்கலம் ரோடு பிரிவில் பஸ் வந்தது. சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் பஸ் குலுங்கி குலுங்கி சென்றது. திடீர் என ஒரு பள்ளத்தில் பஸ் டமார் என்ற சத்தத்துடன் இறங்கி ஏறியது.
இதனால் ஏற்பட்ட அதிர்வில் பஸ்சின் பின்புற படிக்கட்டு உடைந்து விழுந்தது. பஸ்சின் 2 படிகள் உடைந்து விழுந்ததால் அதில் நின்று பயணம் செய்த 15 பேர் ரோட்டில் உருண்டு விழுந்தனர். இதனை கவனிக்காமல் பஸ் சில அடி தூரம் சென்றது. இதனால் கீழே விழுந்தவர்கள் பஸ்சுடன் இழுத்து செல்லப்பட்டு உடலில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. சிலரின் சட்டை, பேண்ட் கிழிந்தது.
பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போடவே பஸ் நிறுத்தப்பட்டது. உடனே டிரைவர் கண்டக்டர் இறங்கி பயணிகளை மாற்று பஸ்சில் ஏற்றிவிட்டு உடைந்த பஸ்சை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். காயம் அடைந்த பள்ளி மாணவர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மேலும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் தாம்பரம் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவன் பாரத், பார்த்திபன், விக்னேஷ் உள்பட சில மாணவர்களுக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications