3 மாணவிகள் பலி.. ஆசிரியைகள் சாலை மறியல்- நாளை செல்லம்மாள் கல்லூரிக்கு விடுமுறை
சென்னை: தண்ணீர் லாரி மோதி மாணவிகள் 3 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து சென்னை கிண்டியில் செல்லம்மாள் கல்லூரி ஆசிரியைகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அண்ணாசாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை செல்லம்மாள் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்ற சென்னை செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் 3 பேர் மீது எதிரே வந்த தண்ணீர் லாரி மோதியதில் மூன்று மாணவிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியான மாணவிகளின் பெயர் சித்ரா, ஆயிஷா மற்றும் காயத்திரி என்பது தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்லூரி மாணவிகள்
கிண்டி மேம்பாலம் அருகே உள்ளது செல்லம்மாள் கல்லூரி. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளான சித்ரா, ஆயிஷா, காயத்ரி ஆகியோர் எப்போதும் ஒன்றாகவே கல்லூரிக்கு செல்வார்களாம். இன்றும் கல்லூரி முடிந்து வீட்டுக்குத் திரும்புவதற்காக சாலையைக் கடக்க முயன்றனர்.

லாரி விபத்து
அப்போது பிரேக் பிடிக்காத தண்ணீர் லாரி ஒன்று வேகமாக வந்தது. எமனாக வந்த லாரி மோதியதில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மீது மோதியது. அப்போது நடந்து சென்று கொண்டிருந்த 3 கல்லூரி மாணவிகள் மீதும் மோதியது.

மாணவிகள் பலி
இந்த விபத்தில் மாணவிகள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவிகள் கதறல்
நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு கல்லூரி மாணவிகள் கதறினர். அலறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். மாணவிகளின் உறவினர்களும், பெற்றோர்களும் ராயப்பேட்டை மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

சாலை மறியல்
இதனிடையே கிண்டியில் செல்லம்மாள் கல்லூரி ஆசிரியைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்லூரி ஆசிரியைகள் சாலை மறியலால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செல்லம்மாள் கல்லூரி எதிரே சரியான பாதுகாப்பு இல்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

டிரைவர் கைது
இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகரைச் சேர்ந்த ராஜேந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து நாளை செல்லம்மாள் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேகத்தடை வேண்டும்
செய்தியாளர்களிடம் பேசிய செல்லம்மாள் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, கிண்டியில் ஒருவழிப் பாதையில் வரும் வாகனங்களின் வேகத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications