தவறு நடந்தால் மாணவர்கள் தட்டிக்கேட்க வேண்டும்.. சொல்வது ஆளுநர் பன்வாரிலால்!
தவறுகள் எங்கு நடந்தாலும் கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்காமல் மாணவர்கள் அவற்றை தட்டிக்கேட்க வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் வலியுறுத்தியுள்ளார்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால், தவறுகள் எங்கு நடந்தாலும் கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்காமல் மாணவர்கள் அவற்றை தட்டிக்கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
தமிழகத்தில் இதுவரை இருந்த ஆளுநர்களை விட அதிரடி சோதனை, ஆய்வு மூலமாக வெளியே தெரிய ஆரம்பித்துள்ளவர் பன்வாரிலால். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி முறையாக செலவு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இவரின் செயலுக்கு எதிராக திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், எதற்கு அசராத ஆளுநர் தன்னுடைய ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டு தான் வருகிறார். கடந்த ஒரு நாளுக்கு முன்புக்கூட அவர் மதுரையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மாணவர்கள் நாட்டில் நடக்கும் தவறுகளை கைக்கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க கூடாது என்றும், தவறுகளை நடக்கும் போதே தட்டிக்கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தமிழக அரசியல்வாதிகள் ஊழலற்றவர்களாக இருக்கிறார்களா என்பதை மாணவர்கள் உறுதி செய்துக்கொள்ள வேண்டும் என்றும் அரசியல்வாதிகளும் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
மேலும் தான் அரசியல்வாதி இல்லை என்று மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், தேசத்தை நேசிக்கும் ஒரு குடிமகன் என்றும், அரசியல்வாதிகளுக்கு நன்னெறி முறைகள் கிடையாது என்றும் அது தமக்கு உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார். நாட்டில் நடக்கும் அநியாயங்களை எல்லாம் கைக்கட்டி கொண்டு வேடிக்கை பார்ப்பது நம் ஆன்மாவை நாமே கொல்வதற்கு சமம் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.