பாஜக அரசை விமர்சனம் செய்த சோபியா கைது... மாணவர்கள் போராட்டம்
திருவாரூர்: பாஜக அரசை விமர்சனம் செய்த ஆராய்ச்சி கல்லூரி மாணவி சோபியா கைது செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் வெடித்தது.
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் சோபியா என்ற ஆராய்ச்சி மாணவி பயணம் செய்தார். அதே விமானத்தில் நேற்று தமிழிசை சவுந்திரராஜனும் பயணம் செய்தார்.

15 நாட்கள் காவல்
அப்போது பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷமிட்டார். இதனால் தமிழிசைக்கும் சோபியாவிற்கும் இடையே பெரும் வாக்குவாதம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று மாலையே அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பரபரப்பு
இதை கண்டித்து திருவாரூர் மாவட்ட அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதேபோல் திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி மாணவர்கள் சோபியாவுக்கு ஆதரவாக முழக்கமிட்டு வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழிசை
தூத்துக்குடியை சேர்ந்த சோபியா கனடாவில் ஆராய்ச்சி மாணவியாவார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம், துப்பாக்கிச் சூடு ஆகியவற்றை கேள்விப்பட்ட அவர் அந்த விமான நிலையத்தில் தமிழிசையை பார்த்தவுடன் கோஷமிட்டுள்ளார்.

ஹேஷ்டேக்
மேலும் மாணவி சோபியா கோஷமிடுவதற்கு முன்னர் அவரது டுவிட்டர் பக்கத்தில் இதுபோல் கோஷமிடவுள்ளதாக குறிப்பிட்டுவிட்டுதான் கோஷமிட்டுள்ளார். இதனால் பாசிசபாஜகஒழிக என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரென்டாகியுள்ளது.












Click it and Unblock the Notifications