நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு!
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
சென்னை: நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மருத்துவ படிப்பில் தமிழக அரசின் 85 சதவீத இடஓதுக்கீட்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்துள்ளதால் தமிழக மாணவர்களின் மருத்துவப்படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் திங்கட்கிழமை மாலை திமுக செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினர். பொதுக்கல்விக்கான மாநில மேடை அமைப்பின் நிறுவனர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு ரத்தத்தால் எழுதிய கடிதத்தை மாணவர்கள் காண்பித்தனர். மேலும் இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பின்னர், தமிழக அரசின் 85% இடஒதுக்கீட்டால் பயன்பெற்று சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்த மாணவர்களின் பெற்றோர்களும் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications