சிறப்பு வாக்காளர்களுக்கு உதவ... பள்ளி மாணவர்களை தேர்வு செய்யும் தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவும் வகையில் பள்ளி மாணவர்களைத் தேர்வு செய்து வருகின்றது தேர்தல் ஆணையம்.
நாட்டில் நூறு சதவிகிதம் வாக்குபதிவு நடத்திடவேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் தேர்தல் ஆணையம், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக வாக்குச் சாவடிகளில் சாய்தள வசதி ஏற்படுத்திக் கொடுக்கவும், வாக்குப் பதிவு இயந்திரம் வரை சென்று வரும் வகையில் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1,569 வாக்குச் சாவடிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு சக்கர நாற்காலி பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பிலும், மருத்துவமனைகளில் இருந்தும் சக்கர நாற்காலிகள் பெறப்பட்டு, அந்தந்த வாக்கு சாவடிகளில் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதற்காக தன்னார்வலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு உதவிட தன்னார்வலர்களாக பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, இளம் செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றைச் சேர்ந்த மாணவ, மாணவியரை ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிகள் வாயிலாக விருப்பம் உள்ள மாணவர்கள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது எனத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications