பிளஸ் டூவில் ஸ்கூல் ஃபர்ஸ்ட், செகண்ட் வந்த சகோதரிகள் தூக்கு போட்டு தற்கொலை
கடலூர்: விருத்தாசலம் அருகே பிளஸ் டூ தேர்வில் பள்ளியில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்த சகோதரிகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்து உள்ள கம்மாபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். தச்சுத் தொழிலாளி. அவரது மனைவி ராஜலட்சுமி. கணவன் மனைவி இருவரும் இதய நோயாளிகள். அவர்களுக்கு கிருத்திகா(18), சரண்யா(17) என்ற மகள்களும், ஹரிச்சந்திரன் என்ற 10ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.
கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த கிருத்திகாவும், சரண்யாவும் பிளஸ் டூ தேர்வில் 930 மற்றும் 928 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர். ஆனால் அவர்களை மேற்கொண்டு படிக்க வைக்க முருகேசனால் முடியவில்லை. மருத்துவமனையும், வீடுமாக இருக்கும் முருகேசனும், ராஜலட்சுமியும் கிருத்திகாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் தங்களுக்கு ஏதாவது நடந்தாலும் இளைய மகளை அவர் பார்த்துக் கொள்வார் என்று அவர்கள் நினைத்தனர்.
இது குறித்து முருகேசனும், ராஜலட்சுமியும் பேசிக் கொண்டிருந்ததை சகோதரிகள் கேட்டுவிட்டு சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முருகேசன் தனது மனைவியுடன் சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றுவிட்டார். அந்த நேரம் பார்த்து சகோதரிகள் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் கம்மாபுரம் கிராமத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.