சென்னை: சப். இன்ஸ்பெக்டர் மகளை கடத்தி திருமணம் செய்ய முயற்சி- 3 பேர் கைது
சென்னை: தாம்பரம் அருகே சப். இன்ஸ்பெக்டரின் மகளை கடத்தி திருமணம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை மீட்ட போலீசார், இதுதொடர்பாக மருந்துக் கடை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்துள்ளனர்.
தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்தூர், பாரதிதாசன் நகர், ராஜிவ் காந்தி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். தாம்பரம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக உள்ளார். இவரது மகள் கலையரசி, 22. பி.பார்ம் முடித்துள்ளார். சேலையூர் கேம்ப் ரோடு சந்திப்பில் உள்ள மருந்து கடையில் பணியாற்றினார். அங்கு சேகர் என்பவர் மானேஜராகப் பணியாற்றினார்.இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து கலையரசி, சொந்தமாக மருந்துகடை தொடங்கி நடத்தி வந்தார். அங்கு சேகரும் வேலை செய்தார்.
கலையரசி சில மாதம் வேலை செய்துவிட்டு நின்றுவிட்டார். அவரது பெயரில் இருக்கும் கடையை தனது பெயருக்கு மாற்றிக் கொடுக்கும்படி சேகர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வியாழக்கிழமையன்று காலை சேகரை சந்திப்பதாக கூறிவிட்டு, வெளியே சென்ற கலையரசி, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தாய், சேகரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, கலையரசி மதியமே திரும்பி சென்றுவிட்டார் என கூறியுள்ளார். அருகில் உள்ள, அவரது அக்கா வீட்டுக்கு சென்றிருப்பார் என நினைத்து, அவரது அக்கா வீட்டுக்கு போன் செய்தபோது, அங்கும் செல்லவில்லை என தெரிந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த தாய், மீண்டும் சேகருக்கு போன் செய்தார். ஆனால், சுவிட்ச் ஆப் என வந்தது. உடனே, கணவர் ராமலிங்கத்துக்கு போன் செய்தார். அவர், சேகரின் மருந்து கடைக்கு சென்றபோது, கடை பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து மாயமான கலையரசியை பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் இரவு 9 மணிக்கு ராமலிங்கத்தின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய கலையரசி, தன்னை வலுக்கட்டாயமாக சிலர் கடத்தி சென்றதாகவும், தற்போது மதுராந்தகம் அருகில் இருப்பதாகவும் கூறி, இணைப்பை துண்டித்துவிட்டார்.
மீண்டும், அதே எண்ணை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து இரவு 11 மணியளவில் சேலையூர் போலீசில், ராமலிங்கம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமலிங்கம் செல்போனுக்கு வந்த எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், மதுராந்தகம் அருகே கருங்குழி கிராமத்தில் இருப்பது தெரிந்தது. உடனடியாக போலீசார், அங்கு சென்று, அங்குள்ள ஒரு வீட்டில் அடைக்கப்பட்டு இருந்த கலையரசியை மீட்டனர்.
கலையரசியை கடத்திய சேகர், 29, அவரது சித்தப்பா மகன் மதுராந்தகம் இருசாமணூர் கிராமத்தை சேர்ந்த டேவிட், 21, கருங்குழியை சோ்ந்த கார் டிரைவர் கார்த்திக், 19 ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சேகரும், கலையரசியும் காதலித்தனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கலையரசியிடம் சேகர் கேட்டபோது, ஏதாவது ஒரு கோயிலுக்கு வரவழைப்பார். அங்கு சென்றால், அவர் வரமாட்டார். அவரை தொடர்பு கொண்டு கேட்டால், இன்று வேண்டாம். மற்றொரு நாள் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறிவிடுவார். பின்னர், முறைப்படி வீட்டில் வந்து பெண் கேளுங்கள் என்பார். எப்போது வீட்டுக்கு வரட்டும் என கேட்டாலும், சரியான பதிலை கூற மாட்டார். இதனால், அடிக்கடி ஏமாற்றி கொண்டு இருந்ததால், திருமணம் செய்வதற்காக கடத்தி சென்றோம் என சேகர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், கலையரசியிடம் விசாரித்தபோது, மருந்து கடை எனது பெயரில் உள்ளது. அதனை சேகர் பெயருக்கு மாற்றி கொடுக்கும்படி என்னை கட்டாயப்படுத்தினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதனால், என்னை கடத்தினார் என கூறினார். இதையடுத்து போலீசார், இரு தரப்பினரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications