போக்கு காட்டும் சுபாஷ் பண்ணையார்... சொத்துகளை முடக்க போலீஸ் முடிவு
தலைமறைவாக உள்ள சுபாஷ் பண்ணையாரின் சொத்துகளை முடக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
நெல்லை: தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் சுபாஷ் பண்ணையாரை பிடிக்க போலீஸார் அவரது சொத்துகளை முடக்க முடிவெடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள புல்லாவெளியை சேர்ந்தவர் சிங்காரம். அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர். இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். பாளை கேடிசி நகர் நான்கு வழி சாலையில் வந்த போது காரில் வந்த கும்பல் போலீஸ் வேனை மறித்து சிங்காரத்தை வெட்டி கொன்று விட்டு தப்பி ஓடியது.
இந்த கொலை வழக்கில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்வின் ராபர்ட், அனிஸ் குமார் உள்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சுபாஷ் பண்ணையார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
இதனால் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பிரகனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக இருந்து வருகிறார். ஏற்கெனவே இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் என்றும், அவர்களது பெயர் பாதுகாக்கப்படும் என்றும் புதிய விசாரணை அதிகாரி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து சுபாஷ் பண்ணையார் தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துகளை முடக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications