அதிமுக கூட்டணியில் இருந்து முஸ்லிம் கட்சிகளை வெளியேற்றினால் ஜெ.க்கு பாஜக ஆதரவு.. சொல்வது சு.சுவாமி
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து முஸ்லிம் கட்சிகளை வெளியேற்றினால் அக்கட்சிக்கு பாரதிய ஜனதா ஆதரவு தரும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக- தேமுதிக- பாஜக இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தை கொளுத்திப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டது. வழக்கம் போல தேமுதிக இறுதி முடிவை அறிவிக்காமல் இருந்து வருகிறது.
அதிமுகவைப் பொறுத்தவரையில் திமுக- தேமுதிக- காங்கிரஸ் என ஒரு மெகா கூட்டணி அமைந்தால் அதற்கு போட்டியாக வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி குறித்து அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

முஸ்லிம் கட்சிகளை வெளியேற்றினால்...
இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது:
சட்டசபை தேர்தலில் முஸ்லிம் கட்சிகளை கூட்டணியில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றினால் அவரை நாங்கள் ஆதரிப்போம்.

தயக்கம்...
திமுக, அதிமுக கட்சிகளுடன் முஸ்லிம் கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கின்றன. இதனால் அக்கட்சிகளுடன் மற்ற கட்சிகள் இணைய தயக்கம் காட்டுகின்றன.

ஸ்டாலின் 'ஓகே'
திமுக தலைவர் கருணாநிதிதான் இந்துக்களுக்கு எதிரி. ஆனால் மு.க.ஸ்டாலின் இந்துக்களுக்கு எதிரி அல்ல. அவர் தம்மை ஒரு இந்து என தெரிவித்தவர். இதனால் எதிர்காலத்தில் ஸ்டாலினுடன் இணைந்து செயல்பட முடியும்.

ராமர் கோவில்
அயோத்தியில் ராமர் கோவிலை இந்த ஆண்டுக்குள் கட்டி முடிப்போம். தமிழகத்தில் 2019-ம் ஆண்டுக்குள் பாரதிய ஜனதா வலிமை பெறும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.












Click it and Unblock the Notifications