தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யனுமாம்... சொல்வது சு.சுவாமி
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாதாம்; அப்படி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்கிறார் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி.
சென்னை: உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்தினால் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். இதை ஒரு கும்பல் அழிக்க முயற்சித்துக் கொண்டிருப்பதை ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றுதிரண்டு எதிர்த்து போராடி வருகிறது.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில் பாஜகவின் எம்பி சுப்பிரமணியன் சுவாமி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்தினால் தமிழக அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
If Jallikattu is held without awaiting SC judgment permitting it &TN Govt fails to enforce the law, Centre must declare President's Rule.
— Subramanian Swamy (@Swamy39) January 12, 2017
இதே சுப்பிரமணியன் சுவாமி ஜல்லிக்கட்டுக்காக உச்சநீதிமன்றத்தில் 11 பக்க மனுவையும் தாக்கல் செய்திருந்தார். தம்மை ஜல்லிக்கட்டு ஆதரவாளராக காட்டிக் கொண்டு இப்போது தமிழக அரசை கலைக்க வேண்டும் என கூறியிருப்பது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.