கொள்கையே இல்லாத 'மராத்தி' ரஜினி அரசியலுக்கு வந்தால் தோல்வி உறுதி... போட்டு தாக்கும் சு.சுவாமி
கொள்கையே இல்லாத மராத்தியரான ரஜினி தமிழக அரசியலில் நுழைந்தால் தோல்வியை மட்டுமே சந்திப்பார் என சுப்பிரமணியன் சுவாமி வெளுத்து கட்டியுள்ளார்.
டெல்லி: எந்த ஒரு கொள்கையுமே இல்லாத மராத்தியரான ரஜினி தமிழகத்தில் அரசியலில் நுழைந்தால் தோல்விதான் கிடைக்கும் என்று பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக தாக்கியுள்ளார்.
தமிழகத்தில் 30 ஆண்டுகாலமாக கேட்டு கேட்டு புளித்து போன ஓலமாக 'ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம்' மீண்டும் எதிரொலிக்கிறது. இப்போது கூட தாம் நேரடியாக அரசியலுக்கு வரப் போகிறேன் என்றெல்லாம் ரஜினிகாந்த் அறிவிக்கவில்லை.
புதிய படம் வரப்போகிறது... அதையொட்டி ரசிகர்களை தக்க வைக்க ஒரு சந்திப்பு நடத்துகிறார்... அந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அரசியல் தொடர்பாக ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.. இன்னும் ஒருபடிமேலே போய் டெல்லியின் நெருக்கடியில் அரசியல் தொடர்பாக சில சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த் என்றுதான் இதை பார்க்க முடியும்.

வட இந்திய ஊடகங்கள் அலறல்
ஆனால் தமிழகத்தின் களநிலவரமே தெரியாத வட இந்திய ஊடகங்கள், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாகவும் அவர் அரசியலில் கால் வைத்த உடனேயே முதல்வர் நாற்காலியே ஓடிவந்துவிடும் பாருங்கள் ரேஞ்சுக்கு ரொம்பவே சவுண்டுவிடுவதான் சகிக்கவே முடியாத பெரும் கொடுமையாக இருக்கிறது. இதனிடையே ரஜினியின் அரசியல் பேச்சு தொடர்பாக பாஜகவின் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

போட்டு தாக்கும் சுவாமி
ரஜினிகாந்த் ஒரு தமிழரே அல்ல. அவர் கர்நாடகாவில் இருந்து வந்த மராத்தியர். ரஜினிகாந்துக்கு எந்த ஒரு கொள்கையுமே இல்லை.

தோல்வி நிச்சயம்
அவருக்கு தற்போது அரசியல் குறித்த தடுமாற்றம்தான் ஏற்பட்டுள்ளது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எவர் தோல்வியைத்தான் தழுவ நேரிடும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

கனவில் மிதக்கும் பாஜக
ஆனால் தமிழக பாஜகவோ ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்; நம்மை ஆதரிப்பார்; தமிழக மக்களும் நமக்கு ஆதரவு தந்து அரியாசனத்தில் அமர வைத்துவிடுவார்கள் என கனவில் மிதந்து கொண்டிருக்கிறது. காலக் கொடுமைதான்!












Click it and Unblock the Notifications