தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவில் இருந்து தினகரனை ஒதுக்கியது முதல் லஞ்ச வழக்கில் கைதானது வரை எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுக்கும் நாஞ்சில் சம்பத் மீது வழக்கு பாயுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: அதிமுகவில் இருந்து தினகரனை ஒதுக்கியது முதல் லஞ்ச வழக்கில் கைதானது வரை எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுக்கும் அவரது தீவிர ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் மீது வழக்கு பாயுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாஞ்சில் சம்பத் என்ற "மாபெரும்" மனிதரை தெரியாதவர்கள் யாரும் இல்லை. வைகோவின் மதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த சம்பத், வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகினார். கடந்த 2012-ல் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அவருக்கு அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியை கொடுத்தார் ஜெயலலிதா. அத்துடன் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதற்காக இன்னோவா காரையும் ஜெயலலிதா பரிசாக கொடுத்தார்.
சர்ச்சையில் சிக்கினார்
இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது. அதற்கு அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்களே கொதித்து போய் இருந்தனர். அந்த நேரத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இதை எதிர்க்கட்சிகள் கண்டித்தன. அப்போது நாஞ்சில் சம்பத், பக்கத்து வீட்டில் இழவு விழுந்ததற்காக நம் வீட்டில் திருமணம் நடத்தாமல் இருக்க முடியுமா?, எறும்புகள் போகும் பாதை என்பதற்காக யானைதான் நடக்காமல் இருக்க முடியுமா? என்று கேள்வி கேட்டு சர்ச்சையை கிளப்பினார்.
பதவியை பறித்தார்
இதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கிய கட்சிப் பதவியை ஜெயலலிதா பறித்துக் கொண்டார். கிட்டத்தட்ட கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருந்தார். இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா தலைமையை ஏற்க மறுத்து கடந்த ஜனவரி 3-ந் தேதி கடுமையாக விமர்சித்தார் சம்பத், இன்னோவா காரை திருப்பி அனுப்பினார். அந்த நேரத்தில் சசிகலா பக்கம் அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் ,நிர்வாகிகள் சாயந்த நிலையில் ஒரு மானஸ்தனாவது அந்தக் கட்சியில் இருக்காரே என்று தமிழக மக்கள் பெருமை கொண்டனர்.
தனது சுய நிறத்தை வெளிப்படுத்தினார்
கட்சியிலிருந்து விலகிய 3 நாள்களில் சின்னம்மாவை தவிர வேறு யாராலும் கட்சியை சிறப்பாக நடத்த முடியாது, அவரது பெருமையை பறைசாற்ற தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்து அந்தர் பல்டி அடித்தார் சம்பத். அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடுத்த இன்னோவாவையும் திரும்ப பெற்றுக்கொண்டார். இதுதான் தாமதம், நெட்டிசன்கள் அவரை கலாய்த்துவிட்டனர். சிலர் அவருக்கு போன் செய்து நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்றும் கேட்டனர்.
துடைச்சுக்குவேன்
அண்மையில் அதிமுக இணைப்பு குறித்து சன் நியூஸ் சேனலுக்கு பேட்டி கொடுத்த சம்பத், தினகரனுக்கு ஆதரவு தருவதால் மக்கள் காறி துப்பினால் துடைச்சுக்குவேன் என்றார். ஒரு வேளை ஓபிஎஸ்ஸை அண்டி பிழைக்கும் நிலை ஏற்பட்டால் செத்துவிடுவேன்... தற்கொலை செய்து கொள்வேன் என்றும் தெரிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் , தினகரன் ஜெயிலுக்கு போனால் தற்கொலை செய்து கொள்வேன் என்கிறார்.
சட்டப்படி குற்றம்
இந்திய சட்டப்படி கொலை செய்வது எப்படி குற்றமோ? தற்கொலை செய்து கொள்வது அதை விட குற்றம். தினகரன் சுதந்திர போராட்டத்தில் பாடுபட்டு ஜெயிலுக்கு போகிறாரா என்ன? தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில்தான் சிறைக்கு செல்லவுள்ளார். இதற்கு உயிரை மாய்த்து கொள்வேன் என்பதா?. இவர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டாமா? இவ்வாறு கூவினால் தினகரன் வெளியே வந்தவுடன் இன்னும் சற்று கூடுதலாக எலும்புத் துண்டுகளை வீசுவார் என்ற விசுவாசம் இருந்தாலும் இவரது பேச்சு அடுத்தவர்களை தற்கொலைக்கு தூண்டிவிடும் படி உள்ளது. எனவே இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுடாமா? என்பதுதான் பொதுமக்களின் கேள்வி.