கோடை விடுமுறை முடிவு: பஸ், ரயில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
நெல்லை: தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறக்கப்படுவதால் விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு செல்ல குடும்பத்துடன் பலர் கிளம்பி சென்ற வண்ணம் இருக்கின்றனர். இதனால் ரயில், பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாணவ, மாணவிகள், அவரது பெற்றோர் தங்களது உறவினர்கள் வீடுகள், கொடைக்கானல், ஊட்டி போன்ற பல்வேறு இடங்களுக்கு சென்றனர். மேலும் பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இந்த நிலையில் கோடை விடுமுறை இன்றுடன் முடிகிறது. நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதையடுத்து சொந்த ஊர் திரும்பியிருந்த பலரும் தாங்கள் பணிபுரியும் இடத்திற்கும், மாணவர்கள் தாங்கள் படிக்கும் பகுதிக்கும் விரைந்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி, சென்னை, வேலூர், கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமானோர் சென்ற வண்ணம் இருக்கின்றனர். இதன் காரணமாக நெல்லை புதிய பேருந்து நிலையம், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது. முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டதால் பலர் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க வரிசையில் காத்திருந்தனர்.
இதனால் பொது பெட்டிகளில் கால் வைக்க கூட இடமில்லை. பலரும் நீண்ட நேரமாக நின்று கொண்டே பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் பயணிகள் தனியார் பேருந்துகளையும் நாடியதால் அவர்கள் தங்கள் இஷ்டம் போல் கட்டணத்தை கூட்டி வசூலித்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் பயணிகளுக்கும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு பேருந்துகளை இது போன்ற நேரத்தில் கூடுதலாக இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.