முடக்கப்பட்ட ரூ742 கோடி சன் டி.வி சொத்துகளுக்கு சட்டவிரோத பரிவர்த்தனையில் தொடர்பு: அமலாக்கப் பிரிவு
சென்னை: முடக்கப்பட்டுள்ள ரூ742 கோடி மதிப்பிலான சன். டிவியின் சொத்துகள் அனைத்தும் சட்டவிரோத பரிவர்த்தனையில் தொடர்புடையவே என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபரான சிவசங்கரன், இந்தியாவில் தனக்குச் சொந்தமான ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குகளை 2006-இல் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க, அப்போது மத்தியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக சி.பி.ஐ.யிடம் 2011-இல் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ, தயாநிதி மாறன், சன் குழும தலைவர் கலாநிதி மாறன், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்தகிருஷ்ணன் உள்பட பலர் மீதும் 4 நிறுவனங்கள் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த விவகாரத்தில் கோடிக் கணக்கில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதால், அது தொடர்பான சட்டப் பிரிவின் கீழ், அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் சொத்துகளில் ரூ.742.54 கோடி அளவுக்கான சொத்துகளை முடக்கி கடந்த மார்ச் 31-ந் தேதி மத்திய அமலாக்கத் துறை உத்தரவிட்டது.
இந்த நிலையில் மத்திய அமலாக்கத் துறை பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சன் டிவி நெட்வொர்க், கல் கம்யூனிகேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரிகள் எம்.ஜோதிபாசு, விட்டல் சம்பத் குமரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.
சட்டவிரோத பரிவர்த்தனையில் தொடர்பு
இம் மனு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், மத்திய அமலாக்கத் துறை முடக்கியுள்ள சொத்துகள் அனைத்தும் சட்ட விரோத பரிவர்த்தனையில் தொடர்புடையவை. 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றத்தை தவிர வேறு எந்த நீதிமன்றமும் தலையிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. அதனால், இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதாடினார். இதனைத் தொடர்ந்து நீதிபதி கூறுகையில், 2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கில் வேறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் இந்த நீதிமன்றம் எவ்வாறு உத்தரவு பிறப்பிக்க முடியும்?
இது தொடர்பாக மனுதாரர் ஏன் உச்ச நீதிமன்றத்தை அணுகக் கூடாது எனக் கேள்வி எழுப்பி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications