சன் டிவி 'வம்சம்' தொடரால் பீதி- வைகோ பிரசாரம் குறித்து மதிமுகவினருக்கு எச்சரிக்கை!!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வம்சம் தொடரில் இடம்பெற்ற ஒரு காட்சியால் மதிமுகவினர் பீதியடைந்துள்ள போயுள்ளனர். இதனைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலர் வைகோவின் பிரசாரம் தொடர்பாக 9 கட்டளைகளை அக்கட்சி பிறப்பித்துள்ளது.
சன் டிவியில் நடிகர் விஜயகுமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கும் வம்சம் தொடர் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் நடிகர் விஜயகுமாருக்கு வில்லியாக நடிகை வடிவுக்கரசி நடித்து வருகிறார். ஒரு சில நாட்களுக்கு முன்பாக நீதிமன்ற வளாகத்தில் வடிவுக்கரசி போட்டுக் கொடுத்த சதியின் படி அவரது அடியாள் ஒருவர் நடிகர் விஜயகுமாரிட கை குலுக்குகிறேன் என்ற பெயரில் விஷம் தடவிய நீண்ட நகங்களை வைத்து கீறிவிடுவார்.
இதனால் விஷம் உடலுக்குள் பாய்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் விஜயகுமார் அனுமதிக்கப்பட்டிருப்பார். இப்படித்தான் போகிறது வம்சம் தொடர் காட்சிகள்.
எங்கே வம்சத்தில் செய்தது போல வைகோவையும் யாரும் இப்படி செய்துவிடுவார்களோ என பீதியடைந்து போய் மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தலைவரோடு (வைகோவுடன்) கை குலுக்க முனைபவர்களைத் தவிர்க்க வேண்டும். நீளமான நகங்களை வளர்த்துக் கொண்டு கையைப் பற்றி இழுக்க முனைபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
கட்சி தொண்டர்களுக்கு மதிமுக தலைமைக் கழகம் இன்று விடுத்துள்ள 9 கட்டளைகள் விவரம்:
வைகோவின் தேர்தல் பரப்புரைப் பயணங்கள், தங்கு தடை இன்றி வெற்றிகரமாக அமைந்திட, கழகத் தோழர்கள் கவனிக்க வேண்டியவை:
1. எந்த இடத்திலும் மேடை அமைத்தல் கூடாது.
2. பொதுச்செயலாளருடைய பிரச்சார வண்டி, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நின்று பேசுகின்ற வகையில் இடத்தைத் தேர்ந்து எடுக்க வேண்டும். தலைவர் வந்தவுடன் வேறு எந்த இடையூறுகளும் இன்றி, நேரடியாகப் பேசுகின்ற வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
3. போக்குவரத்தைத் தடுக்கக் கூடாது.
4. தலைவருடைய பிரச்சார வண்டிக்குள் ஏற முனைவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, கூட்டத்தினர் வேனுக்கு அருகே நெருக்கியடித்துக் கொண்டு நிற்பதைத் தவிர்த்து, சற்றே இடைவெளி இருக்கின்ற வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
5. பொதுச்செயலாளருடைய வண்டிக்கு முன்பு, வழிகாட்டி வாகனம் மட்டுமே செல்ல வேண்டும். தொடர்ச்சியாக ஒலி எழுப்பக் கூடாது. எண்ணற்ற இரண்டு சக்கர வாகனங்கள், அணிவகுப்பின் வேகத்தை மட்டுப்படுத்தி விடும். அடுத்தடுத்த இடங்களில் பேசுகின்ற நேரத்தைக் குறைத்து விடும். மேலும், வேகமாகச் செல்லும்போது விபத்துகள் நேர்வதற்கும் வாய்ப்புகள் உண்டு.
6. வீண் செலவு செய்து ஆரவாரமான வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்தல் கூடாது. குறிப்பாக பட்டாசுகள் வெடிப்பது அறவே கூடாது.
7. சால்வைகள், பூங்கொத்துகள் அளிப்பதையும், மலர்க்கிரீடங்கள் சூட்டுவதையும் தவிர்க்க வேண்டும். அந்தத் தொகையைத் தேர்தல் நிதியாக வழங்குவதே, இக்காலகட்டத்தின் தேவை.
8. தலைவரோடு கை குலுக்க முனைபவர்களைத் தவிர்க்க வேண்டும். நீளமான நகங்களை வளர்த்துக் கொண்டு கையைப் பற்றி இழுக்க முனைபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
9. பொதுச்செயலாளர் பேசும்போது, அனைத்து நிர்வாகிகளின் பெயர்களையும் சொல்வது சிரமம். நேரத்தின் அருமை கருதி கூடுமான வரையில் தவிர்ப்பது நல்லது. தேவைப்பட்டால், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் ஒரு நிர்வாகி என்ற அளவில் தெரிவு செய்து, அவர்களுடைய பெயர்களைப் பெரிய எழுத்துகளில் தெளிவாக எழுதி ஆயத்தமாக வைத்து இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எப்படியெல்லாம் பீதியாக்குகிறார்கள்!!