மனதை மயக்கிய "மூன்" விளையாட்டு.. நீங்களும் ரசித்தீர்களா? #superblueredmoon
Recommended Video
சென்னை: வானம் எனக்கொரு போதி மரம்.. இது நிழல்கள் படத்தில் வரும் பாடல் வரி.. இன்று மாலை வானில் ஒரு "நிழல் விளையாட்டு" அரங்கேறியதை உலகம் கண்டு மயங்கியது.
இந்தத் தலைமுறை மக்களுக்கு கிடைத்துள்ள மிக மிக அரிதான வானியல் நிகழ்வு என்பதால் உலகமே இதைக் காண ஆவலாக காத்திருந்தது. சூப்பர் மூன், ப்ளூ மூன் - நீல நிலவு, சிவந்த நிலா, தாமிர நிலவு என்று இதனை அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.
152 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் அதிசயம் இது. இந்த கிரகணத்தை இன்று உலகமே கண்டு களித்தது. இதுகுறித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் விரிவான விளக்க கட்டுரை இதோ.
சிவப்பு நிலா
31 ஜனவரி 2018 அன்று நிலா உதிக்கும்போதே பூமியின் நிழலால் மறைக்கப்பட்டு உதிக்கும். அந்த சமயத்தில் சூரிய ஒளி நிலவின் மேல் நேரடியாக படாது. ஆனால் நமது வளிமண்டலத்தில் சிதறடிக்கப்படும் ஒளி நிலவின் மேல் படும். குறைந்த அலைநீளமுள்ள ஒளிக்கதிர்கள் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலைநீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. எனவே தான் அது சிவப்பு நிலவாக தோன்றுகிறது.
சூப்பர் நிலவு
மாலை 5.18க்கு பூமியின் நிழல் நிலவின் மேல் மெதுவாக விழ ஆரம்பிக்கும். இது பகுதி சந்திர கிரகணம் எனப்படுகிறது. மாலை 6.21 மணி முதல் இரவு 7.37 மணி வரை பூமியின் நிழல் முழுதாக நிலவை மூடியிருக்கும். இதுவே முழு சந்திர கிரகணம். இரவு 7.37 மமி முதல் இந்த நிழல் விலக ஆரம்பித்து இரவு 8.41 மணிக்கு முழுமையாக விலகி விடும். பூமியின் நிழல் விலகி விட்டாலும் அதன் அரி நிழல் நிலவின் மேல் படுவதால் முழு பிரகாசத்துடன் ஒளிராது. இரவு 9.38 மணிக்கு இந்த அரி நிழலும் விலகும்போது நிலவு அதன் முழு ஒளியுடன் சூப்பர் நிலவாக ஜொலிக்கும்.
கிரகணம் எப்படி ஏற்படுகிறது தெரியுமா?
ஒரு காலத்தில் நிலாவை பாம்பு விழுங்குவதால் தான் முழு நிலா திடீரென மறைந்த போகிறது என்று மக்கள் நம்பினார்கள். அதற்கு ஆதாரமாக தேவர்கள், அசுரர்கள், ராகு, கேது என்று ஏதேதோ கதைகளையும் சொன்னாரர்கள். ஆனால் இன்று அறிவியலின் வளர்ச்சியால் அவை கட்டுக்கதைகள் என்பதும் பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால்தான் சந்திரக கிரகணம் ஏற்படுகிறது என்பதும் பள்ளிப் பிள்ளைகளுக்குக் கூட தெரிந்து விட்டது. நிலா தானாக ஒளி விடுவதில்லை. அது சூரியனின் ஒளியைத்தான் எதிரொலிக்கிறது என்பது நாம் அறிந்ததுதான். பூமி சூரியனைச் சுற்றி வருவதும், நிலா பூமியைச் சுற்றி வருவதும் நாம் அறிந்ததுதான். அப்படி சுற்றும்போது ஏதோ ஒரு சமயத்தில், இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன. அப்போது பூமியானது நிலவுக்கும், சூரியனுக்கும் இடையில் வருவதாக வைத்துக் கொள்வோம். நிலவுக்கும்,சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது நிலவின் மீது படும் சூரிய வெளிச்சம் பூமியால் தடுக்கப்படுகிறது.
சந்திர கிரகணம்
அதாவது பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. அதனால் சந்திரன் சிறிது நேரம் மறைந்து போகிறது. பூமியின் நிழலிலிருந்து வெளியில் வந்தவுடன் மீண்டும் பிரகாசிக்கிறது. இதனைத்தான் நாம் சந்திர கிரகணம் என்று சொல்கிறோம். சூரியன் இருக்கும் திசைக்கு எதிரித்திசையில் நிலவு இருக்கும்போது தான் சாத்தியம் என்பதால் எப்போதும் பெளர்ணமி நாளில்தான் சந்திர கிரகணம் ஏற்படும். அதேபோல பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு வரும்போது அந்த நிலா, சூரியனை நமது பார்வையிலிருந்து சிறிது நேரத்திற்கு மறைத்து விடுகிறது. இதுவே சூரிய கிரகணம். சூரியன் இருக்கும் திசையிலேயே நிலவு இருக்கும்போது தான் சாத்தியம் என்பதால் எப்போதும் அமாவாசை நாளில்தான் ந்திர கிரகணம் ஏற்படும்.
அதென்ன சூப்பர் நிலவு?
இது கிரகணத்துடன் தொடர்பற்ற மற்றொரு வானியல் நிகழ்வுந ஆகும். ஆம், இந்த சூப்பர் மூன் நாளில் நிலவு வழக்கத்தை விட பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும். அதெப்படி என்கிறீர்களா. பூமி சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகிறது என்பது நாம் அறிந்ததுதானே. அது போலவே நிலவும் பூமியை நீள் வட்டப் பாதையில் 27.3 நாட்களில் சுற்றி வருகிறது. அப்படி சுற்றும்போது ஒரு சமயம் பூமியிலிருந்து மிக தொலைவிலும் (சேய்மை நிலை Apogee) அமைகிறது. அப்படி அண்மை நிலையில் வரும் நாள் பெளர்மணமியாக இருந்தால், அந்த நிலவு வழக்கத்தை விட 14%பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தோன்றும். இதையே நாம் சூப்பர் நிலவு என்கிறோம்.
நிலவு நீல நிறமாக தோன்றுமா?
இல்லை. நீல நிலவு என்பது வானியல் நிகழ்வு அன்று. அது ஒரு பேச்சு வழக்கு. ஒரே மாத்தில் இரண்டு பெளர்ணமிகள் வந்தால், 2வதாக வரும் பெளர்ணமியை பேச்சு வழக்கில் நீல நிலவு என்று அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் நிலவின் இயக்கத்தை வைத்தே மாதத்தைக் கணக்கிட்டனர். எனவே ஒரு மாதத்தில் ஒரு பெளர்ணமிதான் வரும். (ஆங்கிலத்தில் Month என்ற சொல் Moon என்ற சொல்லில் இருந்து பிறந்ததுதான். அதுபோலவே திங்கள் என்ற தமிழ்ச் சொல் நிலவு, மாதம் இரண்டையும் குறிக்கும்). ஆனால் இந்த மாதத்திற்கு 29.5 நாட்கள்தான். அதாவது 12 மாத்திற்கு 354 நாட்கள். பிற்காலத்தில்365 நாட்களை 12 மாதங்களாக மாற்ற, மாதத்தின் நாட்களை 30, 31 என்றுஅதிகப்படுத்தினர். இப்படிச் செய்ததால் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் 2 பெளர்ணமிகள் வரும். இப்படி ஒரே சமயத்தில் இரண்டாவதாக வரும் பெளர்ணமி தான் பேச்சு வழக்கில் நீல நிலவு என்று அழைக்கப்படுகிறது.
அரிதான நிகழ்வு
முழு சந்திர கிரகணம், சூப்பர் நிலவு, நீல நிலவு இவை வழக்கமாக வரும் நிகழ்வுகள்தான் என்றாலும் அவை மூன்றும் ஒரே நாளில் வருவது மிக அரிதான நிகழ்வு 152 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு 31, ஜனவரி 2018 அன்று ஏற்படவுள்ளதுதான் இதன் சிறப்பு. கிரகணம் என்பது வழக்கமாக பூமி, சந்திரன் இவை சுற்றும்போது ஏற்படும் நிழல் விளையாட்டுதான் என்பதால் அந்த சமயத்தில் நாம் வெளியில் வந்தாலோ, உணவு உண்பதாலோ, கருவுற்ற தாய்மார்கள் வெளியில் வருவதாலோ எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்பதை நாம் உணர வேண்டும். அதுவே அறிவியல் வளர்ச்சியின் பலவன். சந்திர கிரகணத்தை நாம் வெறும் கண்ணாலேயே காண முடியும். எந்தவித பாதுகாப்பு சாதனமும் தேவையில்லை. எனவே எந்தவித பயமும் இன்றி இந்த அரிய வானியல் நிகழ்வை கண்டு களிப்போம்.
இதுதான் கிரகண நேரம்
முழு சந்திர கிரகணம் (Total Lunar Eclipse)- சிவப்பு நிலா - மாலை 6.21 மணி முதல் இரவு 7.37 மணி வரை
பகுதி சந்திர கிரகணம் (Partial Lunar eclipse) இரவு 7.37 மணி முதல் 8.41 மணி வரை
அரிநிழல் கிரகணம் (Penumbral Eclipse) - இரவு 8.41 மணி முதல் 9.38 மணி வரை
நன்றி:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை.
பேராசிரியர். ராஜ மாணிக்கம், மதுரை