கூவத்தூரில் விசாரணை செய்த எஸ்.பி.முத்தரசி- ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் காத்திருப்போர் பட்டியலில் வைப்பு
சென்னை: சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த போது விசாரணை நடத்திய காஞ்சிபுரம் எஸ்.பி. முத்தரசி மற்றும் வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் பதவி விலகியதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும் படி கோரிக்கையும் விடுத்தார்.
இதனிடையே அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். அப்போது எம்எல்ஏக்கள் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் விடுதியில் தங்கி இருந்த போது காஞ்சிபுரம் எஸ்.பி. முத்தரசி விசாரணை நடத்தினார். அப்போது அங்கு எம்.எல்.ஏக்கள் கடுமையான வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாரமரைக் கண்ணனையும் திட்டினர். இந்த நிலையில் பல்வேறு துறை அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் எந்த பணியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.