அம்மாவின் குல விளக்கே, ஆளப் பிறந்தவளே.. தீபாவுக்கு தென் மாவட்டங்களிலும் வலுக்கும் ஆதரவு
ஜெயலலிதா அண்ணன் மகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் விளம்பர பலகை வைத்து வருவது அக்கட்சிக்குள் ஒரு பிரிவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக தென்காசி பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து தமிழகத்தில் அதிமுகவினர் மத்தியில் யார் கட்சியை வழிநடத்துவார் என்ற கேள்வி சாதாரண தொண்டர்கள் முதல் அதிமுகவின் அனுதாபிகள் வரை எழத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அதிமுகவின் பொது செயலாளராக ஜெயலலிதாவின் தோழியான சசிகலா வரவேண்டுமென்று அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் அமைச்சர்கள் வரை ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் ஆங்காங்கே இதற்க்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அந்த பதவியில் நியமிக்க வேண்டும் என்றும் அவரே கட்சியை நடத்த வேண்டும் என்றும் அதிமுகவினர் விளம்பர பலகைகளை வைத்து வருகின்றனர். தமிழகத்தில் அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் நெல்லை மாவட்டம் பகுதிகளிலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவுகள் பெருகிவருகின்றன.
தென்காசி அருகேயுள்ள பாவூர்சத்திரத்தில் காவல்துறையின் அனுமதியோடு பேருந்து நிலையம் முன்பு தீபாவை ஆதரித்து அதிமுக பிரமுகர்கள் 2இடங்களில் விளம்பர பலகைகள் வைத்துள்ளனர்.இதுக்கு போட்டியாக சில அதிமுகவினர் சசிகலா விளம்பர பலகையையும் வைத்துள்ளனர்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன்,மாவட்ட செயலாளரும்,நெல்லை மக்களவை உறுப்பினருமான பிரபாகரன் ஆகியோரின் சொந்த ஊரான பாவூர்சத்திரத்தில் அதிமுகவினர் தீபாவிற்கு ஆதரவாக விளம்பர பலகைகளை வைத்துள்ளது சில அதிமுகவினர் மத்தியில் பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.