முதல்வர் பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் - போராட்டக்காரர்கள் கோரிக்கை
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தைக்கு வரும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று சென்னை மெரீனா கடற்கரையில் ஆர்பாட்டம் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்புக் என தகவல் பரவியது. இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் பெருந்திரளான கூட்டம் கூடியுள்ளது. மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் திரை உலக பிரபலங்களும் பங்கேற்று ஆதரவளித்தனர். நூறு பேர் தொடங்கி இப்போது ஆயிரக்கணக்காக அதிகரித்துள்ளது.

மெரீனாவில் போராட்டம்
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி போராட்டம் செய்து கைதானவர்களை விடுவிக்கக் கோரி, போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவே இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. டி.ராஜேந்தர், சிநேகன் நடிகர் மயில்சாமி ஆகியோர் இந்த போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு அளித்தனர்.
ஓ.பன்னீர்செல்வம்
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்த வரும் போது தங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
போராட்டம் தொடரும்
மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், இளைஞர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று போராட்டக்கார்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
திரண்டு வரும் கூட்டம்
போராட்டம் நீடித்து வருவதால் மெரீனா கடற்கரை சாலையில் மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் குவிந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கொந்தளிப்பு அதிகரித்து வருவதால், பரபரப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications