ஆதரவை கேட்டு பெறக்கூடாது.. இடதுசாரிகள், விசிகவுக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலடி
ஆதரவை கேட்டுப் பெறுவது சுயநலம், பொது நலம் என்றால் தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த்.
கரூர்: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆதரவை கேட்டு பெறக் கூடாது என்று கம்யூனிஸ்டுகள் , விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் கருத்துக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு வரும் 19ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த மூன்று தொகுதிகளின் தேர்தலை மக்கள் நலக்கூட்டணி புறக்கணித்துள்ளது. இருப்பினும் தே.மு.தி.க. ஆதரவு கேட்டால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் ஆதரவை கேட்டுப் பெறக் கூடாது என்று தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கரூரில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து மதிமுக தலைவர் வைகோ தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார். அதனால், அது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
அதேபோல், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகளும் தன்னிலை விளக்கம் அளித்துள்ளன. ஆதரவு கேட்டால் பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளனர். என்னை பொறுத்த வரை கேட்டுப் பெறுவது சுயநலம், பொது நலம் என்றால் தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிகவை வெற்றி பெற செய்ய வேண்டும்.
பணப்பட்டுவாடாவை நம்பியே திமுக, அதிமுக தேர்தலை சந்திக்கின்றன. தொடர்ந்து இரு கட்சிகளும் ஆட்சியில் இருந்த போதும் அரவக்குறிச்சியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications