ஏற்காடு இடைத் தேர்தலுக்கான திமுக ஆலோசனைக் கூட்டம்.. அழகிரி ஆதரவாளர்கள் 'ஆப்சென்ட்'!

ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைக்க பணியாற்றுவது தொடர்பாக இன்று மாவட்ட திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
மாவட்டச் செயலாளரான மூர்த்தி இதற்குத் தலைமை தாங்கினார். முன்பு இவர் மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்தனர். ஆனால் தற்போது அந்த நிலைப்பாட்டில் அவர் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்திற்கு மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது குறித்துத் தெரியவில்லை. ஆனால் அவரது ஆதரவாளர்கள் யாரும் வராமல் புறக்கணித்து விட்டனர்.
மதுரையில் நடைபெறும் திமுக கட்சிக் கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்களுக்கு தனக்கு முறைப்படி அழைப்பு விடுப்பதில்லை என்று கட்சித் தலைமையிடம் அழகிரியே முறையிட்டதாக முன்பு செய்திகள் வந்தன. மேலும் அவர் சமீப காலமாக கட்சிக் கூட்டம் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்து வருகிறார். இந்த பின்னணியில்தான் இன்றைய கூட்டத்தை அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்துள்ளனர்.
இன்றைய கூட்டத்தில், ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், மு.க.அழகிரி தலைமையில் தென் மாவட்டங்களில் நடந்த அத்தனை இடைத் தேர்தல்களிலும் திமுக அமோக வெற்றி பெற்றது என்பது நினைவிருக்கலாம். குறிப்பாக திருமங்கலம் தொகுதியில் அக்கட்சிக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து திருமங்கலம் பார்முலா என்றே அதற்கு பெயரும் வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications