ஜி.கே. வாசனை முதல்வராக்குவோம்.. பரபரப்பை ஏற்படுத்தும் 'காங்கிரஸ்' போஸ்டர்
சென்னை: தமிழகத்தில் ஜி.கே.வாசனை முதல்வராக்குவோம் என்ற முழக்கத்துடன் சென்னை நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் கோஷ்டிகளிடையே எப்போதும் யார் மேலாதிக்கம் செலுத்துவது என்ற போட்டி இருந்து வருகிறது. ஜி.கே.வாசனை காங்கிரஸ் மேலிடம் புறக்கணிக்கும் போதெல்லாம் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கிவிடலாம் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துவது வழக்கம்.

தனிக்கட்சி
ஆனால் தனிக்கட்சியை மீண்டும் தொடங்கி போணியாகவில்லை எனில் என்ன செய்வது என்று ஆண்டுக்கணக்கில் கையை பிசைந்து கொண்டிருக்கிறார் ஜி.கே. வாசன். அதேபோல் அவ்வப்போது ஜி.கே.வாசனை முன்னிறுத்தியும் தனிக்கட்சி தொடங்க வலியுறுத்தியும் அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பையும் ஏற்படுத்துவார்கள்.

வாசனை முதல்வராக்குவோம்
தற்போதும் அப்படித்தான் ஒரு சுவரொட்டி சென்னை நகரில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டியில் காமராஜர் படத்தைப் போட்டு அதன் கீழே, "எனது வழியில் நடக்கும் வாசன் தம்பி, தமிழகத்தில் உனது தலைமையில் நல்லாட்சி அமைந்திடும். முயற்சி செய். வெற்றிபெறுவாய். உன்னை ஆசீர்வதிக்கிறேன்!'' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

கோவை தங்கம்
இந்த சுவரொட்டிகளை ஒட்டியது யாரோ அல்ல.. காங்கிரஸின் மாநிலப் பொருளாளர் கோவை தங்கம்தான். இது குறித்து கோவை தங்கம் கூறுகையில், 'தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் இப்போதைய ஒரே நோக்கம். முன்பைவிட இப்போது தமிழக காங்கிரஸ் பேரியக்கம் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்கள் தலைவர் மூப்பனாரால் உருவாக்கப்பட்டவர்கள் அனைவரும் இன்றைய தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைமையை அறிந்து, தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அப்படிச் செயல்பட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி உருவாவதை யாராலும் தடுத்துவிட முடியாது!''

மக்கள் செல்வாக்கு வாசனுக்கே..
தமிழக மக்கள் மத்தியிலும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு உடையவர் ஜி.கே.வாசன் என்பது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கே தெரியும். ஆக, மக்கள் செல்வாக்கு மிக்க ஜி.கே.வாசனை முதல்வர் ஆக்குவோம் என்ற கோஷத்துடன் களம் இறங்கியிருக்கிறோம். கட்சிக்கு உயிருட்டும் வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. எங்கள் பாதையை தீர்மானித்துவிட்டோம். எங்கள் பயணம் இனி முன்பைவிட வேகமாக இருக்கும் என்கிறார்.

முதல்வர் வேட்பாளர்
இப்படி சுவரொட்டிகளை ஒட்டியிருப்பதன் மூலம் தமிழக சட்டசபை தேர்தலில் ஜி.கே.வாசனை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரது ஆதரவாளர்கள் முன்வைத்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் சுவரொட்டிகள்
அத்துடன் சென்னையில் தாம் ஒட்டிய சுவரொட்டிகளை மாநிலம் முழுவதும் இருக்கும் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுக்கும் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார் கோவை தங்கம். இதனால் சிதம்பரம் கோஷ்டியினர் கடும் கொந்தளிப்புடன் காங்கிரஸ் மேலிடத்துக்கு புகார்களை தட்டிவிட்டுள்ளனர்.

கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்
இது குறித்து சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறுகையில், காங்கிரஸில் முதல்வர் வேட்பாளர், பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு கலாசாரமே இல்லை.. அதைத்தான் லோக்சபா தேர்தலின் போதும் காங்கிரஸ் மேலிடம் கடைபிடித்தது. அதையும் மீறி இப்படி சுவரொட்டிகளை ஒட்டுவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்கிறனர்.
ஆகா களை கட்டுதே... இதுவும் நல்லாத்தான் இருக்கு












Click it and Unblock the Notifications